சென்னை, கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தை சுற்றிய பகுதிகளில் நடைபெற்ற அவசரகால ஒத்திகை நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை தரப்பில் கூறப்படுவதாவது:- சென்னை அணுமின் நிலையம் அணுசக்தி துறையின் கல்பாக்கம் மையத்தில் பல பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இதில் இந்திய அணுமின் கழகத்தின் கீழ் உள்ள சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், 'பாவினி' நிறுவனத்தால் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் உலை, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் வசதிகள் ஆகியவை இதில் அடங்கும். கல்பாக்கம் அணுசக்தித்துறை மையம் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் விதிமுறைகளின்படி, அவசரக்கால தயார்நிலை திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாடு, எதிர்வினை முறையில், கல்பாக்கம் அணுசக்தித்துறை மையத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வளாகத்திற்கு வெளியிலான அவசரக்கால ஒத்திகை நடத்தப்படுகிறது. உலையை மின் உற்பத்தி செயல்பாட்டிற்கு கொண்டு செல்வதற்கு முந்தைய ஒழுங்குமுறை தேவைகளுக்கு இணங்க, கல்பாக்கம் வளாகத்தை சுற்றியுள்ள அவசரக்கால திட்டமிடல் மண்டலத்தில் இந்த ஒத்திகை நேற்று நடத்தப்பட்டது. மாவட்ட கலெக்டர் நிகழ்வுக்கான கட்டளை அதிகாரியாக செயல்பட்ட செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் டாக்டர் எம் வீரப்பனின் தலைமையிலான மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையால் பொதுவெளியில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. அணுமின் நிலையத்தின் நிலைய இயக்குநரும் வளாக அவசரக்கால இயக்குநருமான எஸ்.பி. செல்வகுமரன் பிஎப்பிஆர் நிலைய இயக்குநர் அல்லு ஆனந்த் ஆகியோர் தலைமையிலான கல்பாக்கம் அவசரக்கால குழு இந்த ஒத்திகைக்கான தொழில்நுட்ப உள்ளீடுகளை வழங்கியது. அணுமின் நிலையத்தின் வடிவமைப்பு, சிறந்த பாதுகாப்பு ஆகியவை காரணமாக, இத்தகைய அவசரநிலை நிகழ்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக குறைவு. ஆனாலும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதில் தயார்நிலையை சோதிப்பதே இந்த ஒத்திகையின் நோக்கமாகும். அவசரகால ஒத்திகை மாவட்டத்திலுள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்தவித இடையூறும் இன்றி இந்த அவசரகால ஒத்திகை நடத்தப்பட்டது. அணுசக்தி, பேரிடர் மீட்பு ஆகியவை தொடர்புடைய பல்வேறு அமைப்புகளை சேர்ந்த சுமார் 15 மூத்த அதிகாரிகள் இச்சோதனை முயற்சியை நேரில் பார்வையிட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-emergency-drill-at-kalpakkam-nuclear-power-station




