Full Article
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் ஒரு மனிதனுக்கு இரண்டு பிறவிகள் உண்டு என்பார்கள். ஒன்று அவன் இந்த உலகில் பிறக்கும் நாள். மற்றொன்று, மரணத்தின் வாசலில் இருந்து மீண்டும் வாழ்க்கைக்குத் திரும்பும் நாள். எனக்கு அந்த இரண்டாவது பிறவி கிடைத்த நாள் ஏப்ரல் 14, 2008. அந்த நாளை நான் என் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாது. என் இதயம் ஆபத்தான பாதிப்பைச் சந்தித்த நாள் அது. ஆனால் அதே நாள்தான், கடவுள் ஒரு மருத்துவரின் உருவத்தில் எனக்கு வாழ்க்கையை மீண்டும் பரிசாக அளித்த நாள். அந்த மருத்துவர்தான் டாக்டர் ஹாரி சாந்த சீலன். அன்று நான் சென்னையின் தாம்பரத்தில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சென்றேன். கடுமையான நெஞ்சு வலியுடன் இருந்தேன். ஈசிஜி எடுத்தார்கள். "பிரச்சினை எதுவும் இல்லை. இது வாயுத் தொல்லை" என்று கூறி மருந்து கொடுத்து வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். ஆனால் என் வலி குறையவில்லை. அந்த நேரத்தில் நான் டாக்டர் ஹாரி சாந்த சீலனைச் சந்தித்தேன். நான் கொண்டு சென்ற அதே ஈசிஜி அறிக்கையை அவர் அமைதியாகப் பார்த்தார். இரண்டு நிமிடங்கள்... வெறும் இரண்டு நிமிடங்கள். ஆனால் அந்த இரண்டு நிமிடங்களில் அவர் பார்த்தது ஒரு காகிதம் அல்ல. அணையப்போகும் ஒரு உயிரின் துடிப்பை. ஒரு நொடியும் தாமதிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்க வழிவகுத்தார். அந்தத் துரிதமான முடிவுதான் இன்று நான் உயிருடன் இருப்பதற்கான காரணம். இன்று நான் எழுதும் ஒவ்வொரு வரியும், பேசும் ஒவ்வொரு வார்த்தையும், என் குடும்பத்துடன் பகிரும் ஒவ்வொரு சிரிப்பும், என் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும்... அவரின் அந்த ஒரு முடிவின் பரிசு. மருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல என்பதை அவர் தனது செயலால் எனக்குக் கற்றுக் கொடுத்தார். அது மனித உயிரைக் காக்கும் உயர்ந்த பொறுப்பு என்பதை அவர் வாழ்ந்து காட்டினார். அறிவு பல மருத்தவர்களிடம் இருக்கும். அனுபவமும் பலரிடம் இருக்கும். ஆனால் நோயாளியின் உயிரை தனது உயிராக நினைக்கும் அக்கறை, எளிமை, கருணை, மனிதநேயம்... இவை எல்லோரிடமும் இருப்பதில்லை. அந்த அரிய குணங்களின் உருவமாக நான் கண்டவர் டாக்டர் ஹாரி சாந்த சீலன். என் வாழ்க்கையில் நான் பெற்ற மிகப் பெரிய செல்வம் என்னவென்றால், என்னைக் காப்பாற்றிய அந்த மருத்துவரைச் சந்தித்ததே. என் நெஞ்சு துடிக்கும் ஒவ்வொரு நொடியும், என் இதயம் அவருக்கு நன்றியைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. சிலர் நோயைக் குணப்படுத்துகிறார்கள். சிலர் உயிரைக் காப்பாற்றுகிறார்கள். ஆனால் மிகச் சிலர் மட்டுமே, ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே காப்பாற்றுகிறார்கள். அந்த அரிய மனிதர்களில் ஒருவர்... டாக்டர் ஹாரி சாந்த சீலன். இந்த வாழ்க்கை முழுவதும் நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டவன். "என் இதயம் இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறது என்றால், அதில் ஒரு துடிப்பு என் தாய்க்காக... இன்னொரு துடிப்பு டாக்டர் ஹாரி சாந்த சீலனுக்காக." என் உயிரின் ஆழத்திலிருந்து எழும் நன்றியுடன், இந்த நன்றிக் காணிக்கையை அவருக்கு சமர்ப்பிக்கிறேன். -முத்துராஜன் நாராயணசாமி விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Full article — see link below



