சென்னை, தமிழகத்தில் காலியாகவுள்ள 7 சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் வருகிற அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் 9-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் களம் காண அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி, ஆளும் கட்சியாக த.வெ.க. மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா? அல்லது புறக்கணிக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு தி.மு.க. முதல் கட்சியாக 2 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. அதன்படி மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டியிடுகிறார்கள். தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு இந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மதுராந்தகத்தில் மரகதம் குமாரவேலும், தாராபுரத்தில் சத்தியபாமாவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. நயினார் நாகேந்திரன் பேட்டி இந்த நிலையில், இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது;- “தவெகவின் குதிரை பேரத்தால் இந்த தேர்தல் மீண்டும் வந்துள்ளது. அதே வேட்பாளர்கள் மூன்று மாதத்திற்கு முன்பு வெற்றி பெற்று பின்னர் வெளியேறி தவெகவில் சேர்ந்து மீண்டும் அவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும். அதற்காக பாஜக முழு முனைப்பாக செயல்பட்டு அவர்களை வெற்றி பெற வைக்கும். அதிமுக வெற்றி பெற பாஜகவினர் முழுமனதுடன் பாடுபடுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-ensure-aiadmks-victory-in-the-by-election-nainar-nagendran




