சென்னை, பெருங்குடி மண்டலக் கண்காணிப்பு அலுவலர் மகேஷ்வரி ரவிக்குமார் தலைமையில், பெருங்குடி மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டம் இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- பெருங்குடி மண்டலத்தில் வார்டு 181 முதல் 191க்குட்பட்ட 11 வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மண்டலக் கண்காணிப்பு அலுவலர் மகேஷ்வரி ரவிக்குமார் தலைமையில் இன்று (16.09.2026) பெருங்குடி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மண்டல அலுவலர் என்.ஶ்ரீதேவி, பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைக் குடிநீர் வாரியம், தமிழ்நாடு மின்சாரத்துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட சேவைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் இக்கூட்டத்தில், பெருங்குடி மண்டலத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்களை பணிகளை விரைந்து முடித்திடவும், மழைநீர் சீராகச் செல்லும் வகையில் வண்டல் வடிகட்டித் தொட்டிகள் மற்றும் மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள், ஆறுகள், குளம், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள், ஆகாயத்தாமரைகள் அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்திடவும், மழைநீர் தேங்கும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்புகளை விரைந்து முடித்திடவும், மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 14 நிவாரண முகாம்களில் பொதுமக்களை தங்கவைப்பதற்கான அடிப்படை வசதிகள் மற்றும் உணவு சமைத்திடும் 6 மைய சமையலறைகளில் உணவுப் பொருட்களின் இருப்பினை உறுதி செய்திடவும், மாநகராட்சி உள்ளிட்ட சேவைத்துறைகளின் சார்பில் நடைபெறும் பணிகளை ஒருங்கிணைந்து செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு இதனைத் தொடர்ந்து, ரேடியல் சாலை முதல் பெருங்குடி குப்பைக் கிடங்கு வரையிலான நெடுஞ்சாலைத்துறையின் சாலைப் பகுதியில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் உள்ள நீர் எளிதில் வெளியேறும் வகையில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி மற்றும் இந்த சாலையில் உள்ள 17 கல்வெர்ட்டுகளின் வழியே மழைநீர் தங்குதடையின்றி பக்கிங்ஹாம் கால்வாயில் செல்லும் வகையில் ஆகாயத்தாமரைகளை அகற்றி வண்டல்கள் தூர்வாரிடும் பணி ஆகியவற்றினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், இந்த சாலையில் உள்ள பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் சரிந்துள்ள மண் மேடு பகுதியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பகுதியில் தண்ணீர் எளிதில் செல்லும் வகையில் சரிந்த மண் மேடுகளை அகற்றி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/perungudi-monitoring-officer-holds-consultation-on-monsoon-preparedness-measures




