திருப்பூர், வேறு ஒருவருடன் செல்போனில் பேசியதால் ஆத்திரம் அடைந்து, கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து பனியன் நிறுவன தொழிலாளி கொலை செய்தார். தையல் தொழிலாளி அரியலூர் சாத்தம்பாடியை சேர்ந்தவர் ராதிகா (வயது 36). இவருக்கு திருமணம் ஆகி மகன், மகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு ராதிகா பிரிந்தார். மகன், மகளை தனது தாயாரின் பராமரிப்பில் விட்டுவிட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வந்தார். பின்னர் அவர், திருப்பூர் பெரிச்சிப்பாளையம் மாரியம்மன் கோவில் பின்புறம் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில், தையல் தொழிலாளியாக ராதிகா வேலை செய்தார். கள்ளக்காதல் ராதிகா வேலை செய்த பனியன் நிறுவனத்தில், திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்த தையல் தொழிலாளி அருண்குமார் (36) என்பவரும் வேலை செய்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்ததால் அருண்குமாருக்கும், ராதிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் இருவரும், கடந்த 2 ஆண்டுகளாக அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ராதிகா அடிக்கடி செல்போனில் வேறு ஒருவருடன் பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் ராதிகா மீது அருண்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக அருண்குமாருக்கும், ராதிகாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கொடூரக் கொலை நேற்று முன்தினம் இரவு அருண்குமாரும், ராதிகாவும் செல்போனில் பேசினர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் அருண்குமார், ராதிகாவின் வீட்டுக்கு நள்ளிரவு வந்தார். அப்போதும் அவர்களுக்குள் வாய்த்தகராறு அதிகரித்தது. இதில் ஆத்திரம் அடைந்த அருண்குமார், ராதிகாவின் கழுத்தை நெரித்து கீழே தள்ளியதாக தெரிகிறது. இதில் கட்டிலில் தலை மோதியதில் ராதிகா மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அருண்குமார் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் ராதிகா பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ராதிகாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை - கைது இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், நடத்தையில் சந்தேகப்பட்டு ராதிகாவை அருண்குமார் தாக்கியதில் அவர் இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த அருண்குமாரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/enraged-over-her-talking-to-another-man-on-the-phone-young-man-commits-atrocity-against-illicit-lover




