மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, அங்கு பா.ஜ.க ஆட்சியமைத்துள்ளது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கட்சியில் அதிருப்தியாளர்கள் அதிகரித்துள்ளனர். பெரும்பாலான எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக சென்றுவிட்டனர். அதோடு மம்தா பானர்ஜியுடன் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் வெளியில் எங்கு சென்றாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இத்தாக்குதலை நடத்துவது பொதுமக்களா அல்லது பா.ஜ.கவினரா என்பது தெரியாமல் மர்மமாக இருக்கிறது. புதிய திருப்பமாக மம்தா பானர்ஜி மீதும் இப்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்குள்ள வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் ஹலிசஹார் பகுதியில், போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்ததாகக் கூறப்படும் கட்சித் தொண்டர் பிர்ஜு கியோவின் வீட்டிற்கு மம்தா சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத சிலர் 'திருடி' கொள்ளையர்களின் ராணி" போன்ற முழக்கங்களையும் எழுப்பியவாறே அவரது காரை நோக்கி கற்கள், செங்கற்கள் மற்றும் பாட்டில்களை வீசினர். போராட்டக்காரர்கள் அவரது காரின் மீது சேற்றைப் பூசி, காலணிகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வீசியெறிந்ததோடு, அவருக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். அங்கு இருந்த போலீஸார் அந்த பகுதியை சுற்றி வளைத்து எந்த வித அசம்பாவிதமும் நடக்க விடாமல் செய்தனர். மம்தா பானர்ஜியுடன் திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கல்யாண் பானர்ஜி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் டோலா சென் ஆகியோரும் சென்று இருந்தனர். இத்தாக்குதல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, ''அந்தப் போராட்டத்தில் நான் உயிரிழந்திருக்கக்கூட வாய்ப்பிருந்தது. போலீஸார் முன்னிலையில் சமூக விரோதக் கும்பல் இந்தத் தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் கடுமையான காயங்களை ஏற்படுத்தும் அளவுக்குக் பெரிய கற்கள் பயன்படுத்தப்பட்டன. கார் மீதான தாக்குதல் எவ்வளவு கடுமையாக இருந்ததென்றால், ஒருவேளை ஜன்னல்கள் திறந்திருந்திருந்தால் என் தலை பிளந்திருக்கும். போலீஸார் மௌன சாட்சிகளாக இருந்தனர்,” என்று மம்தா கூறினார். இதைத் தொடர்ந்து, மேற்கு வங்க பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா மற்றும் மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அக்னிமித்ரா பால் ஆகியோர், இதுபோன்ற சம்பவங்கள் வங்காளத்தின் கலாச்சாரம் அல்ல என்று கூறினர். இந்தத் தாக்குதலில் பா.ஜ.கவிற்கு தொடர்பு இல்லை என்று முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார். மேலும், மம்தா அரசியல் செய்வதாக கிண்டல் செய்த அவர், “விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அவர் தகுதியானவரா?" என்றும் கேள்வி எழுப்பினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/i-could-have-been-killed-in-the-attack-mamata-banerjees-car-attacked-with-stones-shoes-and-mud




