புதுடெல்லி, டெல்லியில் அதிகாலையில் டிப்பர் மோதி 3 பேர் உயிரிழந்தனர். டெல்லியின் சரிதா விஹார் பகுதியில் டிப்பர் லாரி ஒன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன் மற்றும் ஆட்டோ மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். போக்குவரத்து போலீசாருக்கான கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அரியானா மாநில பதிவு எண் கொண்ட டிப்பர் லாரி, இன்று அதிகாலை சுமார் 3.20 மணியளவில் நொய்டாவில் இருந்து வந்து கொண்டிருந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கிரேன் மற்றும் ஆட்டோ மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த உமேஷ் (23), பிரவீன் (35) மற்றும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வந்த சூரஜ் (34) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சூரஜ் குறித்து மேலும் தகவல்களை அவரது நிறுவனத்திடம் இருந்து போலீசார் பெற்று வருகின்றனர். மேலும், சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (20), அனுப் (26) மற்றும் ரோஹிணியைச் சேர்ந்த கேம் சிங் (40) ஆகிய 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் சங்கம் விஹாரைச் சேர்ந்த மற்றொரு தொழிலாளியான சுதீர் என்பவர் காயமின்றி உயிர் தப்பினார். விபத்து ஏற்பட்டதும் டம்பர் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்தால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/three-killed-three-injured-after-dumper-crashes-into-vehicles-in-delhis-sarita-vihar




