சென்னை மெரினா கடற்கரையில் ஒருகாலத்தில் குழந்தைகளின் சிரிப்பால் சுழன்ற ராட்டினங்கள், இன்று பார்வையாளர்களுக்காகக் காத்திருக்கின்றன. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் மெரினா கடற்கரை, தினமும் ஆயிரக்கணக்கான மக்களை வரவேற்கிறது. கடலலைகளை ரசிக்கவும், குடும்பத்துடன் நேரம் செலவிடவும், நண்பர்களுடன் பொழுதைக் கழிக்கவும் மக்கள் இங்கு வருவது வழக்கம். இந்தக் கடற்கரையின் மாலை நேரத்தை இன்னும் உற்சாகமாக மாற்றியவற்றில் முக்கியமானவை ராட்டினங்கள். மறைந்த மகிழ்ச்சி ஒருகாலத்தில் மெரினா கடற்கரைக்கு வந்த குழந்தைகள், ராட்டினத்தில் ஏறாமல் வீடு திரும்புவது அரிது. ராட்டினம் சுற்றும்போது எழுந்த சிரிப்பொலியும், பெற்றோரின் மகிழ்ச்சியான முகங்களும் மெரினாவின் மாலை நேரத்தின் ஓர் அங்கமாகவே இருந்தன. ஆனால் இன்று அந்தக் காட்சி மெல்ல மாறிவிட்டன. மெரினா ராட்டினங்கள் குறையும் கூட்டம் இப்போது மெரினா கடற்கரையில் நிற்கும் பல ராட்டினங்கள் பெரும்பாலான நேரங்களில் பயணிகளின்றி அமைதியாகக் காத்திருக்கின்றன. காலப் போக்கில் ஒரு நபருக்கு 100 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது, ஒரு பக்கம் கட்டண உயர்வு காரணமாகக் கூட பயணிகள் குறைவான அளவில் வருகை தருகின்றனர் என்று கூறப்படுகிறது. டிஜிட்டல் தாக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி குழந்தைகளின் உலகையே மாற்றியிருக்கிறது. மொபைல் போன்கள், ஆன்லைன் விளையாட்டுகள், சமூக வலைத்தளங்கள் போன்றவை அவர்களின் பொழுதுபோக்கின் ஒரு பகுதியாக மாறியுள்ளன. இதனால் வெளியில் விளையாடும் பழக்கமும், ராட்டினம் போன்ற பாரம்பர்ய பொழுதுபோக்கு அம்சங்களில் ஆர்வமும் குறைந்துள்ளன. மெரினா ராட்டினங்கள் பழுதடைந்த ராட்டினங்கள் தொடர்ந்து பயன்பாட்டில் இல்லாததால், மெரினா கடற்கரையில் உள்ள சில ராட்டினங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. ஒருகாலத்தில் குழந்தைகளின் சிரிப்போடு சுழன்ற அந்த ராட்டினங்கள், இன்று தூசிபடர்ந்து, துருப்பிடித்த நிலையிலும், இயக்கப்படாமல் அமைதியாக நிற்கின்றன. இயக்க ஆள் இல்லை என்பதால் அல்ல. ஏற குழந்தைகள் இல்லை என்பதால். அதனால்தான் பல ராட்டினங்கள் இயக்காமல், நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் சிலவற்றில் பழுதுகளும் ஏற்பட்டுள்ளன. மங்கும் வாழ்வாதாரம் ராட்டினத்தை நம்பி வாழும் பல குடும்பங்களுக்கு, இந்தத் தொழில் மட்டுமே வருமான ஆதாரமாக உள்ளது. குழந்தைகள் குறைந்ததால் வருமானம் சரிந்திருக்கிறது; வருமானம் குறைந்ததால் பராமரிப்புச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் ராட்டினங்களும் பழுதடைகின்றன. இது ஒரு சுழற்சியாக மாறி, தொழிலையே தொடர்ந்து நடத்த முடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. உரிமையாளரின் குரல் சென்னையில் வசித்து வரும் நாராயணசாமி (59), என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக மெரினா கடற்கரையில் ராட்டினம் இயக்கி வருகிறார். அவரிடம் பேசுகையில், "மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை ராட்டினத்தை இயக்குகிறேன்; வார இறுதி நாட்கள்தான் ஓரளவு வருமானம் வருகின்றன. ஒரு வாரத்திற்கு சுமார் ரூ.3,000 மட்டுமே கிடைக்கிறது, மாத வருமானம் சுமார் ரூ.12,000 தாண்டுவதில்லை. மெரினா ராட்டினங்கள் மழைக்காலம் வந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். முன்பை போல குழந்தைகள் ராட்டினத்தில் ஆர்வம் காட்டுவதில்லை, அதனால் அவர்களைக் கவர வண்ண விளக்குகள் கொண்டு ராட்டினத்தை அலங்கரித்துள்ளேன், இருந்தும் கூட்டம் எதிர்பார்த்த அளவு இல்லை" என வருத்தத்துடன் தெரிவித்தார். "மெரினாவில் அமைந்துள்ள பூங்கா மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுக்கும் மக்கள் அதிகம் செல்வதால் எங்கள் ராட்டினங்களை நாடி வருபவர்கள் குறைந்துவிட்டனர். ராட்டினம் சுழலாத நேரத்தைவிட, குழந்தைகளின் சிரிப்புச் சத்தம் கேட்காத நேரம்தான் மனதிற்கு அதிக வேதனையாக இருக்கிறது" என நாராயணசாமி கண்ணீரை மறைத்தபடி தெரிவித்தார். சென்னை: பயன்பாட்டுக்கு வந்த மெரினா `இரவு நேர காப்பகம்' - விரிவாக்கும் திட்டத்தில் சென்னை மாநகராட்சி! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/features/human-stories/no-children-no-laughter-marinas-merry-go-rounds-fall-silent




