காந்திநகர், குஜராத்தில் மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை ஒன்று, வீட்டிற்குள் நுழைந்து குளியலறையில் பதுங்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. அந்த வகையில், ஆனந்த் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்தது. வெள்ளத்தோடு சேர்த்து விஷ பூச்சிகள், பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்களும் வீடுகளுக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்தனர். இந்த நிலையில், பாலாபாய் சவுகான் என்பவரது வீட்டிற்குள் வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட 7 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று புகுந்துள்ளது. முதலில் இதனை வீட்டில் இருந்த யாரும் கவனிக்கவில்லை. வீட்டின் குளியலறையில் வெளிப்புற கதவிற்கு அருகில் இருந்த நிலையில், அந்த குளியலறைக்குள் சென்று முதலை பதுங்கிக் கொண்டது. அதே சமயம், பாலாபாயின் வீட்டிற்கு வெளியே நாய்கள் திரண்டு தொடர்ச்சியாக குறைத்துக் கொண்டே இருந்துள்ளன. இதனால் சந்தேகமடைந்த அவர், குளியலறை பக்கம் சென்று பார்த்தபோது, அங்கு சுமார் 7 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று பதுங்கி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்த அந்த முதலையை பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த முதலையை அருகில் உள்ள குளத்தில் விட்டனர். சம்பவம் நடந்த பகுதிக்கு அருகில் மட்லஜ் என்ற கிராமத்தில் இருக்கும் குளத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. அங்குள்ள ஒரு முதலைதான் மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டுள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/heavy-rains-in-gujarat-7-foot-long-crocodile-enters-house-with-floodwaters-panic-ensues-as-it-hides-in-the-bathroom




