சென்னை, கோயம்பேட்டில் வீடு புகுந்து திரைப்பட துணை நடிகரை கத்தியால் 2 மர்ம நபர்கள் வெட்டிவிட்டு தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடு புகுந்து வெட்டு சென்னை கோயம்பேடு, மெட்டுக்குப்பம், கோவர்த்தன் நகரைச் சேர்ந்தவர் ஆண்டனி தாமஸ் (வயது 35). திரைப்பட எழுத்தாளராகவும், பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராகவும் நடித்து வருகிறார். இவரது தாயார் புஷ்பலதா, டி.வி.தொடர்களில் துணை நடிகையாக நடித்து வரு கிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆண்டனி தாமஸ் வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத 2 பேர் கத்தியுடன் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் ஆண்டனி தாமசின் தலையில் கத்தியால் வெட்டி விட்டு, 'நாளை கோர்ட்டுக்கு வரக்கூடாது. போலீசில் அளித்த புகாரை திரும்பப் பெற வேண்டும்' என மிரட்டியதாக தெரிகிறது. பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆண்டனி தாமஸ், வீட்டின் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கடந்த மே மாதம் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக சதீஷ் சிங் என்பவர் மீது ஆன்டனி தாமஸ் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தது தெரியவந்தது. மேலும், இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு தொடர்பாக நேற்று ஆண்டனி தாமஸ் கோர்ட்டில் ஆஜராக வேண்டியிருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் வீடு புகுந்து தன்னை தாக்கியதாக ஆண்டனி தாமஸ் போலீசாரிடம் தெரிவித்தார். சமூக வலைதள பதிவு காரணமா? இதற்கிடையே, ஆண்டனி தாமசின் தாயார் புஷ்பலதா கடந்த மாதம் முதல்-அமைச்சர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டதாக கூறப்படுகிறது. அந்த பதிவில் தகாத வார்த்தைகளால் கருத்து தெரிவித்ததாக கூறப்படும் தி.மு.க.வைச் சேர்ந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புஷ்பலதா விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால், ஆன்டனி தாமஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை காரணமா? அல்லது அவரது தாயார் புஷ்பலதா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு தொடர்பான சர்ச்சை காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/supporting-actor-slashed-with-a-knife-in-koyambedu-unidentified-individuals-brazenly-barged-into-his-home




