சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர், மத்திய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைப் பரிசீலித்து, அதற்கேற்ப உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி இந்தியப் பிரதமர்நரேந்திர மோடி அவர்களுக்கு இன்று (13.8.2026) கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- முதல்-அமைச்சர் விஜய் கடிதம் அக்கடிதத்தில், நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்தல், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குதல் ஆகிய பொருண்மைகள்மீது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற விவாதங்கள் குறித்து இந்தியப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகவும், இது தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 12.8.2026 அன்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது என்றும், அத்தீர்மானத்தில், மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கையை மாற்றாமல் அதே நிலையில் நிரந்தரமாகத் தொடர்வதற்கும், மாநிலங்களின் தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ அளவைப் பாதுகாப்பதற்கும் (அதாவது, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான தற்போதைய விகிதாச்சாரப் பகிர்வை ஏற்கெனவே உள்ளவாறே தொடர்வதற்கும்), மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் இடையேயான விகிதத்தைப் (2.2: 1) பேணுவதற்கும், தற்போதைய 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலிருந்தே பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தியிருப்பதாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். பெரும் அநீதி மேலும், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பகிர்வை மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நிர்ணயம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் பின்னணியில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பின்னர், அரசியலமைப்பின் 81(2)(a)-ஆம் சட்டப்பிரிவைப் பின்பற்றி தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், 1967-இல் தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 41-லிருந்து 39-ஆகக் குறைக்கப்பட்டது போன்று, தென்னிந்திய மாநிலங்கள் தங்களின் கணிசமான நாடாளுமன்றத் தொகுதிகளை இழக்க நேரிடும் என்று சட்டமன்றப் பேரவையில் விவாதிக்கப்பட்டது என்றும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி, நல்ல பொருளாதார வளர்ச்சியை எய்தி, சிறப்பான சுகாதார மற்றும் பொதுநலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ள தென்னிந்திய மாநிலங்களுக்கு, 1971-ஆம் ஆண்டிற்குப் பிந்தைய மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டு, தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கும் எந்தவொரு மறுவரையறை நடவடிக்கையும் பெரும் அநீதி இழைப்பதாக அமையுமென்றும் அக்கடிதத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தீர்மானத்தில் பின்வருவன வலியுறுத்தப்பட்டுள்ளன:- (i) மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக நிரந்தரமாக்கப்பட வேண்டும்; (ii) மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய அளவிலேயே நிரந்தரமாக்கப்பட வேண்டும்; அதாவது, மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய இடப் பகிர்வு முறை தொடர வேண்டும். (iii) எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தல்களிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (1/3) இடஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்துகிறது. மேலும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை இணைத்திருப்பதாகவும். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தைப் பரிசீலித்து, இது தொடர்பான உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமரை கனிவுடன் கேட்டுக் கொள்வதாகவும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-writes-to-prime-minister-modi-regarding-constituency-delimitation




