சென்னை, நீடித்த கோடை வெப்பத்தால் அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மின்சாரம் கொள்முதல் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்த ஆண்டு கோடைக்காலம் எதிர்பாராத வகையில் நீடித்ததன் காரணமாக, மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. அதேவேளையில் காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலை மின் உற்பத்தியும் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக சில நேரங்களில் மின்னழுத்தக் குறைபாடு போன்ற தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டன. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வெளிச்சந்தையில் இருந்து கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சிறப்புக் குழுக்கள் இதன் மூலம் தற்போது மின் தொகுப்பின் (Grid) நிலமை சீராகவும், நம்பகத்தன்மையுடனும் உள்ளது. மேலும், மின் கட்டமைப்பு மாறுபாடுகள் மற்றும் மின் விநியோக நிலைமையை தொடர்ந்து மின்வாரிய தலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து, உடனுக்குடன் உரிய உத்தரவுகள் வழங்கி வருகிறது. மின்விநியோக பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சிறப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் உடனடியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்விநியோகம் சீரமைக்கப்பட்டு வருகிறது. தடையற்ற மின்சார விநியோகம் மின்தடை ஏற்படும் நிகழ்வுகளை எந்தவித அலட்சியமும் இன்றி உடனடியாக சரிசெய்ய வேண்டும் என களப்பணியில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு. வழக்கமான பராமரிப்புப்பணிகளுக்காக திட்டமிடப்பட்ட மின்தடைகளை இயன்றவரை தவிர்க்கவும் களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு நாள் முழுவதும் குறிப்பாக இரவு நேரங்களிலும், சீரான, நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும், மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் மின்சாரத்துறை சார்ந்த புகார்களுக்கு, 24 மணி நேரமும் இயங்கும் நுகர்வோர் சேவை மையமான 'மின்னகம்' 94987 94987" என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-electricity-demand-due-to-summer-heat-additional-2000-mw-of-power-procured




