கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் பகுதியை சேர்ந்தவர் சவுவிக் தாஸ். இவருக்கும் நிகிதா சாஹா என்ற பெண்ணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த புதுமணத் தம்பதி தங்கள் ஹனிமூனை கொண்டாடுவதற்காக டார்ஜிலிங் பகுதியில் உள்ள சிட்டாங் மலைவாசஸ்தலத்திற்கு சென்றனர். அவர்கள் அங்குள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்தனர். அந்த சொகுசு விடுதியில் விருந்தினர்களுக்கு பார்பிக்யூ(Barbeque) செய்து கொடுக்கும் வசதி இருந்துள்ளது. இதையடுத்து சவுவிக் தாஸ்-நிகிதா தம்பதி, பார்பிக்யூ தயார் செய்யும் இடத்திற்கு சென்றிருந்தனர். அங்கு அவர்கள் முன்னாலேயே அடுப்பில் ஊழியர் ஒருவர் பார்பிக்யூ தயார் செய்து கொண்டிருந்தார். சவுவிக் தாஸ்-நிகிதா தம்பதியினர் அந்த அடுப்பிற்கு மிகவும் நெருக்கமாக அமர்ந்திருந்தனர். இந்நிலையில் அந்த ஊழியர் அடுப்பை எரியூட்டுவதற்காக பிளாஸ்டிக் கேனில் இருந்து ஒரு திரவத்தை ஊற்றியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த அடுப்பில் இருந்து தீ கொளுந்துவிட்டு எரிந்தது. அந்த தீ அடுப்பிற்கு அருகில் உட்கார்ந்திருந்த நிகிதாவின் உடலில் பற்றியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகிதாவின் உடல் முழுவதும் தீ பரவியது. அருகில் இருந்த அவரது கணவர் சவுவிக் தாஸ், தனது மனைவியின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றார். மறுபுறம் அங்கிருந்த ஊழியர் தனது சட்டையை கழற்றி தீயை அணைக்க முயற்சி செய்தார். இருப்பினும் இந்த சம்பவத்தில் நிகிதாவின் உடலில் மிக மோசமான தீக்காயங்கள் ஏற்பட்டன. அந்த சொகுசு விடுதியில் தீயை அணைப்பதற்கான உபகரணங்கள் எதுவும் தயார் நிலையில் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், காயமடைந்த நிகிதாவை மருத்துவமனைக்கு அனுப்பவும் அவர்கள் உதவி செய்யவில்லை என சவுவிக் தாஸ் குற்றம்சாட்டியுள்ளார். சுமார் ஒரு மணி நேரமாக அங்கேயே காத்திருந்த பிறகு, அவர்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுவும் சுமார் 3 மணி நேரம் பயணம் செய்து சிலிகுரி செல்லும் வரை நிகிதா தீக்காயங்களால் ஏற்பட்ட வலியால் துடித்துக் கொண்டு இருந்துள்ளார். பின்னர் அவர் தாசுன் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிகிதாவின் உடலில் சுமார் 60 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/newlyweds-on-their-honeymoon-fire-breaks-out-while-cooking-the-horrific-tragedy-that-befell-the-young-woman-right-before-her-husbands-eyes




