சென்னை, கண்ணியம் என்பது திமுகவின் மேடைகளில் வெறும் வெற்று முழக்கம்தானா? என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- பொதுமேடைகளில் வரம்பு மீறும் திமுக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுவெளியிலும் தொண்டர்கள் கூட்டத்திலும் "அரசியல் களத்தில் யாரை விமர்சித்தாலும் கண்ணியத்தோடும் நாகரிகத்தோடும் பேசுங்கள்" என்று உபதேசம் செய்கிறார். ஆனால் எதார்த்த களத்தில் நடப்பதோ அதற்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கிறது. முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆர்.எஸ்.பாரதி போன்ற மூத்த உறுப்பினர்கள் பொதுமேடைகளில் வரம்பு மீறி, முதல்-அமைச்சர் விஜய்யை ஒருமையில் விளிப்பதும், "ஓடுகாலி நாய்" எனத் தரம் கெட்ட வன்மச் சொற்களைப் பயன்படுத்துவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல் களத்தில் கொள்கை ரீதியான முரண்பாடுகளும் கருத்து மோதல்களும் இருப்பது இயல்புதான்; ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சரை நோக்கி தனிநபர் வன்மத்தையும், அநாகரிகமான வசவுகளையும் வீசுவது ஒட்டுமொத்த ஜனநாயக மாண்புகளுக்கு விடுக்கப்படும் பெரும் அச்சுறுத்தல். கட்சித் தலைவரின் குடும்பம் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை இந்த எல்லை மீறல்களைத் தொடர்ந்து அரங்கேற்றுவதை திமுக தலைமை கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்? வீழ்ச்சிக்கான அறிகுறி மக்கள் தீர்ப்பை மதிக்காமல் மாநில முதல்-அமைச்சரையே பொதுமேடைகளில் ஒருமையில் இழிவுபடுத்துவது, பெண்களுக்கு எதிரான தொடர் அவமதிப்புகள் மீது தன் கட்சிக்குள் உரிய நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பது, அதிகாரத்தை இழந்த விரக்தியில் பொதுவெளியில் தரம் தாழ்ந்து கூச்சலிடுவது என திமுக இன்று தன் நம்பகத்தன்மையை இழந்து மூழ்கும் கப்பலாக மாறிக் கொண்டிருக்கிறது. பொது அமைதியையும் அரசியல் நாகரிகத்தையும் சீர்குலைக்கும் வகையில் முன்னாள் அமைச்சர்களும் நிர்வாகிகளும் இப்படி நாவடக்கமின்றிப் பேசுவதை திமுகவின் தலைமை கண்டும் காணாமல் இருப்பது அவர்களின் வீழ்ச்சிக்கான தெளிவான அறிகுறி. அரசியல் களம் மக்கள் நலனுக்கான ஆரோக்கியமான விவாதக் களமாக இருக்க வேண்டுமே தவிர, இத்தகைய நாகரிகமற்ற தனிநபர் வசவுகளுக்கான கூடாரமாக ஒருபோதும் மாறக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/is-dignity-merely-an-empty-slogan-on-dmk-platforms-manickam-tagore




