"கர்ப்பத்திலிருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என கண்டறிய ரூ 23 ஆயிரம்தான்" என ஊர் ஊராக கேன்வாஸ் செய்து சட்டவிரோத ஸ்கேன் சென்டர் நடத்திய கும்பலை மருத்துவக் குழுவினர் பொறி வைத்து பிடித்துள்ள சம்பவம் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் "4 கர்ப்பிணிகளை கூட்டி வரும் கர்ப்பிணிக்கு ஸ்கேன் ப்ரீ, அதோடு நல்ல கமிஷனும் தரப்படும்"என்று புரோக்கர்கள் மூலம் கேன்வாஸ் செய்து லட்சக்கணக்கில் கல்லா கட்டியுள்ளது இக்கும்பல். பல மாநிலங்களில் நிகழ்ந்த பெண்சிசுக் கொலையை தடுக்க மத்திய அரசு PCPNDT (Pre Conception and Pre-Natal Diagnostic Techniques Act 1994) என்ற சட்டத்தை 30 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்ததால் கருவில் இருக்கும் பாலினத்தை சோதனை செய்து தெரிந்து கொள்பவருக்கும், கண்டறிந்து சொல்பவருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ 50 ஆயிரம் அபராதமும், அதே குற்றத்தை மீண்டும் செய்தால் 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ 1 லட்சம் அபராதமும், மருத்துவர் இக்குற்றத்தில் ஈடுபட்டால் 5 ஆண்டுகளுக்கு தொழில் செய்ய முடியாது என்பது போன்ற கடுமையான விதிகளுடன் இச்சட்டம் நடைமுறையில் உள்ளது. கருக்கலைப்பு 90-களில் சில மாவட்டங்களில் பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் கொடுத்து கொல்வதும், கருவில் இருக்கும்போதே அழிக்கும் கொடூர பழக்கம் பதற வைத்தது. இதனால் பல கர்ப்பிணிகளின் உயிருக்கு ஆபத்தும் ஏற்பட்டது. இதை தடுக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் கடுமையான சட்டங்கள் போடப்பட்டன. பெண் குழந்தையை வளர்க்க முடியாதவர்களுக்காக தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்து அரசே குழந்தைகளை வளர்த்தது, பெண் குழந்தைகளை பெற்றோர் விரும்ப வேண்டும் என்பதற்காகவே பல நலத்திட்டஙகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன. அதேநேரம், வசதியானவர்கள், அதிகாரமிக்கவர்கள் தங்கள் செல்வாக்கால் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிற்கு சென்றும் பாலினத்தை தெரிந்துகொள்வதாக சொல்லப்படும் நிலையில், சாமானிய மக்களில் சிலர் ஏதாவதொரு வகையில் கருவிலுள்ள பாலினத்தை தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். இதை பணம் பார்க்க துடிக்கும் கும்பல்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்தக் கும்பலை பிடிப்பதில் முக்கிய பங்காற்றிய கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலரிடம் பேசியபோது, "இதுபோன்ற சட்டவிரோத சம்பவங்களை தடுத்திட தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம். பெண் குழந்தையை விரும்பாத, ஏதோ ஒரு காரணத்தால் கர்ப்பத்தை கலைக்க விரும்புகின்ற பெண்களிடம் ஆசைகாட்டி தங்கள் சட்டவிரோத ஸ்கேன் சென்டருக்கு அழைத்து வர பல ஊர்களிலும் புரோக்கர்களை வைத்திருக்கிறார்கள். ஸ்கேன் சென்டர் செயல்பட்ட வீடு இவர்கள் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள கர்ப்பிணிகளிடம் பேசி ஓமலூருக்கு வரச்சொல்லி ஒரு நபருக்கு ரூ 23 ஆயிரம் கட்டணம் பெற்று ஸ்கேன் எடுத்து பாலினத்தை தெரிவித்து வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதுபோனற செயல்களில் ஈடுபடும் புரோக்கர்களின் மொபைல் எண்களை சேகரித்து வைத்து அவ்வப்போது எங்கள் பெண் ஊழியர்கள் மூலம், 'குடும்பத்துல பிரச்சனை, பெண் குழந்தையான்னு தெரிஞ்சக்கணும்' என்று கர்ப்பிணிகள் போல பேசி பார்ப்போம். 'எப்படி எங்கள் நம்பர் தெரியும்' என்று கேட்டால், 'எங்களுக்கு தெரிஞ்ச அக்கா, உங்களிடம் ஸ்கேன் எடுத்திருக்கிறார், அவர்தான் நம்பர் கொடுத்தார்' என்று பதில் அளிப்போம். இதில் அவர்களுக்கு சந்தேகம் வந்தால் திரும்ப அழைக்க மாட்டார்கள். இதற்காகவே புதுப்புது சிம்களை போட்டு இவர்களிடம் பேசிக்கொண்டே இருப்போம். அப்படித்தான் ஒரு நாள் எங்கள் ஊழியர், 'ஸ்கேன் எடுக்க இரண்டு பேர் காரில் வருகிறோம்' என்று சொன்னதும், புரோக்கர் ராதிகா, உடனே ரூ. 46 ஆயிரம் செலவாகும் என்று சொல்ல ஒப்புக்கொண்டதும், 'கிருஷ்ணகிரியிலிருந்து இன்னொரு கர்ப்பிணியும் வருகிறார், அவரையும் உங்கள் காரிலேயே கூட்டி வந்திடுங்கள்' என்று சொன்னதற்கும் ஒப்புக்கொண்டோம். காரை ஓமலூருக்கு முன்பே நிறுத்தி, எங்கள் பெண் ஊழியர்களுக்கு உறவினர் என்று உடன்சென்றவர்களை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு அவர்களை மட்டும கூட்டிச் சென்றார்கள். நாங்கள் டிராக் ஆன் செய்து கொடுத்த மொபைலை சைலண்ட் மோடில் மறைத்து எடுத்துச் சென்றதால் நாங்கள் ஒரு காரிலும், இரண்டு டூவீலரிலும் பின் தொடர்ந்து ஸ்கேன் சென்டர் நடத்திய முத்துநாயக்கன்பட்டி கிராமத்துக்குள் சென்றோம். எங்கள் ஊழியர்களை வீட்டுக்குள் கூட்டிச்சென்று ஸ்கேன் எடுக்க தயாரானபோது, உள்ளே புகுந்துவிட்டோம். உடனே உஷாரனவர்கள் ஸ்கேன் கருவிகளை அன்கேயே விட்டுவிட்டு பின்வாசல் பக்கமாக தப்பி விட்டனர். மேத்தா பிரதீப்தாஸ் - ரவி சேலம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் நந்தினி அளித்த புகாரில் தொளசம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து ஸ்கேன் எடுக்க வந்த கர்ப்பிணிகள் குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். ஸ்கேன் டெக்னீஷியன் சுகுமாரை ஏற்கனவே இதே குற்றத்துக்காக திருப்பத்தூரில் பிடித்து சிறைக்கு அனுப்பினோம். குண்டாஸ் போட்டும் வெளியில் வந்து இந்த குற்றத்தை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். அதுபோல் கனகவல்லி மீதும் சட்டவிரோத கருக்கலைப்பு, ஸ்கேன் பார்த்தது என 6 வழக்குகள் உள்ளன. டாக்டர்கள் ரிடர்ன் செய்யும் ஸ்கேன் மெஷினை விதிகளை மீறி வாங்கி வந்து பயன்படுத்தி வருகிறார்கள். அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம். இது மட்டுமின்றி இவர்கள் கருக்கலைப்பும் செய்வதோடு, தமிழகம் முழுவதும் பல ஊர்களில் இந்த குற்றத்தை செய்து வந்திருக்கிறார்கள். தற்போது இக்கும்பலில் வீட்டை வாடகைக்கு விட்டு அவர்களுக்கு உதவிபுரிந்த மேத்தா பிரதீப்தாசும், ரவி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ராதிகா, சுகுமார், வடிவேல், கனகவல்லி, அவரது கணவர் மணி தலைமறைவாகியுள்ளனர், இவர்கள் சிக்கினால் இவர்கள் எந்தெந்த ஊரில் யார் யாருக்கெல்லாம் ஸ்கேன் செய்துள்ளனர், கருக்கலைப்பு செய்துள்ளனர் என்பது தெரியவரும்" என்றனர். ஸ்கேன் கருவிகளை கைப்பற்றிய மருத்துவ அதிகாரிகள் வீட்டை வாடகைக்கு விட்ட மேத்தா பிரதீப் தாசின் கதை வித்தியாசமானது என்கிறார்கள். இவருக்கு ஏற்கனவே ஒன்னரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், இவர் மனைவி 4 மாத கர்ப்பமாக உள்ளதை தெரிந்துகொண்ட கனகா, அவரை சந்தித்து கருவில் உள்ளது ஆணா, பெண்ணா என்பதை ஸ்கேன் மூலம் கட்டணம் இக்லாமல் பார்த்து சொல்கிறேன் என்று கூற அவரும் சம்மதிக்க, அதோடு அவர்களோடு நட்பாக, வீட்டை வாடகைக்கு கேட்டதும் சம்மதித்துள்ளார் என்கிறாகள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/illegal-scan-center-scammers-arrested




