சென்னை, சட்டமன்றத்தில் காவல்துறை மானியக்கோரிக்கை விவாதம் மீது முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை அளித்து பேசி வருகிறார். அனல் பறந்த சட்டசபை கடந்த 18 நாட்களாக நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், முக்கிய நிகழ்வாக கடந்த 3-ந்தேதி (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசியதால் சட்டசபையில் அனல் பறந்தது. உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, "த.வெ.க. அரசு அமைந்த 116 நாட்களில் தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது. இந்த அரசின் அறிவிப்புகளை எல்லாம் பார்க்கும்போது, எல்லா திட்டத்திற்கும் மொத்தமாக சேர்த்து தாய்மாமன் காதுகுத்து திட்டம் என்று பெயர் வைத்திருக்கலாம். கடந்த 116 நாட்களில் சுமார் 550 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளது. இதில், 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 8 காவல் மரணங்கள், 10 ஆணவக் கொலைகள் அடங்கும். எங்களுடைய கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்" என்று கூறினார். யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன" என்று பேசினார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது, இடையே எழுந்து பேசிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், "உறுப்பினர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் அதற்கான தெளிவான விளக்கத்தை திங்கட்கிழமை (இன்று) அளிக்கிறேன். தற்போது நான் இங்கே இல்லை என்றாலும் யார்-யார் என்ன கேள்விகள் கேட்கிறார்கள் என்ற தகவல் எனக்கு வந்துவிடும். எல்லாவற்றிற்கும் தெளிவான பதிலை சொல்வேன். தற்போது உங்கள் சார்பாக அவர்களிடம் உத்தரவாதம் ஒன்றை கேட்கிறேன். அப்போது அவர்கள் (தி.மு.க.) யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது" என்று கூறிவிட்டு சட்டசபையை விட்டு வெளியேறிவிட்டார். முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை இந்நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து, த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கரவொலியுடன் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனது உரையை தொடங்கினார். அப்போது பேசிய அவர், ‘மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு அடித்தளம் காவல்துறை. ஒரு மாநிலத்தின் அமைதியில் தான் முன்னேற்றம் உள்ளது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால்தான் தொழில் முதலீடுகள் வரும். சட்டத்தை மதிக்காதவர்களுக்கு காவல்துறை எதிரியாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-bustling-legislative-assembly-chief-minister-vijay-has-begun-his-reply-speech




