சென்னை, த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக கூறப்படுகிறது. ரூ.35 கோடி பேரம் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு, திரைமறைவில் அரங்கேறிய சதித் திட்டம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா, தன்னிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக பரபரப்பு புகார் மனுவை சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் அளித்தார். இந்த புகார் மனுவில், அவர் கூறிய தகவல்கள் அடிப்படையில் அவரிடம் பேரத்தில் ஈடுபட்டதாக, ஐ.பி.டி.எஸ். என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் நிறுவனர் திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களாக கருதப்படும் தியாகராஜன், நரேஷ், கரூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர்களான ரமேஷ், கார்த்தி, செல்வன், மணப்பாக்கத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சீனிவாசன், அஸ்தினாபுரம் ஏரிக்கரை தெருவை சேர்ந்த ராஜேஷ் ஆகிய 8 பேரை தனிப்படை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர். பரபரப்பு வாக்குமூலம் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க ரூ.180 கோடியில் சதித்திட்டம் தீட்டப்பட்டது என்று கைதானவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவருடைய சகோதரர் அசோக்குமார் ஆகியோர் கூறியதன் பேரில்தான் இந்த பேரத்தை நடத்தியதாகவும் போலீசாரிடம் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் போலீசாரின் கைது நடவடிக்கையில் சிக்காமல் இருக்க தலைமறைவு ஆனார்கள். இன்று ஆஜராகிறாரா. மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகிய 2 பேருக் கும் திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் பிறப்பித்தனர். அந்த சம்மனில் அவர்கள் 2 பேரும் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் அவர்கள் 2 பேரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை ஆஜராகவில்லை என்றால் அவர்கள் 2 பேர் மீதும் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். விமான நிலையங்களில் கண்காணிப்பு இதற்கிடையில், அவர்கள் 2 பேரும் வெளிநாடு தப்பி செல்லாமல் இருப்பதற்காக நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக் அவுட்' நோட்டீசை திருவல்லிக்கேணி போலீசார் அனுப்பினார்கள். இதனையடுத்து விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/bargain-to-overthrow-the-tvk-regime-will-senthil-balaji-appear-for-investigation-today




