சென்னை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பரமசிவம் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு இஸ்லாம் மதத்தை ஏற்று தனது பெயரை சமீர் அகமது என மாற்றிக் கொண்டார். அதன் பின்னர் தனக்கு 'முஸ்லிம் லெப்பை' சான்றிதழ் கோரி சமீர் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவரது விண்ணப்பத்தை வருவாய்த் துறையினர் நிராகரித்த நிலையில், அதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் சமீர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது. இதற்கிடையில் கடந்த 2024 மார்ச் 9-ந்தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், இந்து மதத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் அல்லது பட்டியல் சாதியினர் பிரிவை சேர்ந்தவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறும்போது, அவர்கள் 'பிற்படுத்தப்பட்ட வகுப்பு இஸ்லாமியர்' (BC-Muslim) ஆக கருதப்பட்டு, ஏழு அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய சமூகங்களில் ஒன்றின் கீழ் சாதிச் சான்றிதழ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சமீர் தாக்கல் செய்த மனு மதுரை ஐகோர்ட்டு கிளையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்னர், அவர் ஒரு இஸ்லாமியராக மட்டுமே கருதப்படுவார். லெப்பை, ராவுத்தர், மரைக்காயர், ஷேக், சையத் போன்ற குறிப்பிட்ட இஸ்லாமிய சமூகங்களின் உறுப்பினராக மதமாற்றத்தின் மூலம் ஆக முடியாது” என்று குறிப்பிட்டனர். மேலும், தமிழக அரசு வெளியிட்ட அரசாணை சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய கால தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர் சமீருக்கு 'முஸ்லிம் லெப்பை' சான்றிதழ் வழங்க முடியாது என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தனர். அதோடு, இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் என்ற சான்றிதழை கோர முடியாது என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். இந்த நிலையில், மதுரை ஐகோர்ட்டு கிளையின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/issue-regarding-denial-of-certificate-to-a-person-who-converted-to-another-religion-tamil-nadu-government-appeals-in-the-supreme-court




