லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் கமலேஷ் ராய். இவர் ‘ஏர் இந்தியா’ விமானத்தில் மும்பை செல்வதற்காக வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்திற்கு தனது மனைவியுடன் வந்தார். விமான நிலையத்தில் அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது கமலேஷ் ராயிடம் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. அந்த துப்பாக்கிக்கான உரிமம் தன்னிடம் இருப்பதாகவும், அதனை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் கமலேஷ் கூறினார். இந்நிலையில், அந்த துப்பாக்கியை சோதனை செய்வதற்காக எடுத்தபோது அது தவறுதலாக சுட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 2 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரு பெண் காவலரின் காலிலும், அருகில் நின்ற மற்றொரு நபரின் கை விரலிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உயிருக்கு ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விமானங்களில் துப்பாக்கியை கொண்டு செல்ல அனுமதி உள்ளதா? துப்பாக்கியில் உள்ள தோட்டாக்கள் முழுமையாக அகற்றப்பட்டு, பூட்டப்பட்ட, கடினமான ஒரு பெட்டகத்தில் வைக்கப்பட்ட பிறகு, அதை விமானத்தில் சட்டப்பூர்வமாக எடுத்துச் செல்லலாம். முறையான உரிமம் இருக்கும் பட்சத்தில், துப்பாக்கியை விமானத்தில் எடுத்துச் செல்லப்படுவது குறித்து செக்-இன் கவுண்டரில் தெளிவாக தெரிவிக்க வேண்டும். ஒரு பயணி, தனது உடைமைகளில் உரிமம் பெற்ற ஒரு ரிவால்வர், பிஸ்டல் அல்லது ஷாட்கன் மற்றும் ஐம்பது தோட்டாக்களை எடுத்துச் செல்லலாம். உள்நாட்டு விமானங்களில், ஒரு பயணி ஒவ்வொரு துப்பாக்கி மற்றும் 50 தோட்டாக்களுக்கும், வரிகள் நீங்கலாக சுமார் ரூ.5,000 கையாளும் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். சர்வதேச விமானங்களுக்கு இது 100 டாலர்(சுமார் ரூ.9,545) ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/passenger-arrives-at-varanasi-airport-with-a-gun-two-critically-injured-in-accidental-discharge




