கேரளாவில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஆபரேஷன் Toofan’ குறித்து தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தாலா ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தமிழ்நாடு மற்றும் கேரளா இணைந்து செயல்பட இருப்பதாகத் தெரிவித்தார். ஆபரேஷன் Toofan என்றால் என்ன? கேரள காவல்துறை மாநிலம் முழுவதும் முன்னெடுத்து வரும் மிகப்பெரிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையே ‘ஆபரேஷன் Toofan’ (Operation Toofan – The Narco Hunt) ஆகும். மாநில எல்லைகள், கடலோரப் பகுதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கிய நகரங்களை மையமாகக் கொண்டு போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்புகளை முறியடிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். ரமேஷ் சென்னிதாலா இதுகுறித்து பேசிய ரமேஷ் சென்னிதாலா, கேரள அரசு போதைப்பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். இது ஒரு மாநிலத்தின் பிரச்னை அல்ல. போதைப்பொருள் பிரச்சினை தற்போது ஒரு மாநிலத்திற்கு மட்டுப்பட்டதாக இல்லாமல், இந்தியா முழுவதும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது மாநில எல்லைகள் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டிய அவசியம் குறித்து முதலமைச்சர் விஜய்யுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், இதற்காக தமிழ்நாடு மற்றும் கேரள காவல்துறைகள் இணைந்து செயல்பட முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கேரள காவல்துறைக்கு கிடைக்கும் உளவுத்தகவல்கள் தமிழ்நாடு காவல்துறையுடன் பகிரப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தமிழகத்தில் போதைப்பொருட்களுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட ரமேஷ் சென்னிதாலா, அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார். அதேபோல், கேரளாவில் விரைவில் நடைபெறவுள்ள போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் விஜயை அழைத்துள்ளதாகவும் தெரிவித்தார். முதல்வர் விஜய் மோகன்லால் - விஜய் ஒரே மேடையில்? இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கேரளாவின் பிராண்ட் அம்பாசிடராக உள்ள நடிகர் மோகன்லால் மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோர் ஒரே மேடையில் உரையாற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரமேஷ் சென்னிதாலா கூறினார். தமிழ்நாட்டை மட்டுமல்லாமல் தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் முதலமைச்சர் விஜய்யை பெருமளவில் பின்பற்றி வருவதாகவும், அவர் போதைப்பொருட்களுக்கு எதிராக பேசினால் அது இளைஞர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்! போதைப்பொருள் கலாச்சாரத்திற்கு எதிரான போராட்டம் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து நடைபெற வேண்டிய ஒன்றாகும் என்றும், இந்த விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் ரமேஷ் சென்னிதாலா வலியுறுத்தினார். முதலமைச்சர் விஜயுடனான இந்தச் சந்திப்பில் தமிழக காவல்துறையின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/what-is-operation-toofan-kerala-minister-ramesh-sennithala-speaks




