வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்கிரீட் மேல்தளம் அமைக்கும் பணியில் 13-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிக பாரம் தாங்காமல் கான்கிரீட் தளம் சரிந்தது. பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் இடிபாடுகளில் சிக்கியபோது, முக்கால் பாகம் போடப்பட்ட கான்கிரீட் கலவையும், ராட்சத இரும்பு கம்பிகளின் சாரமும் அவர்கள்மீது விழுந்தது. தகவலறிந்ததும், தமிழக போலீஸாரும், தீயணைப்புத்துறை வீரர்களும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அருகிலுள்ள ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குடிபாலா போலீஸாரும் விரைவாக வந்து உதவினார்கள். இரவு நேரம் ஆனதாலும், இடிபாடுகளை அகற்றி தொழிலாளிகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டதாலும் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் வரவழைக்கப்பட்டனர். தேவாலய விபத்து இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு உடனடி சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும், துரதிஷ்டவசமாக 3 தொழிலாளர்கள் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், யாரேனும் இடிபாடுகளில் சிக்கியுள்ளார்களா? என்பதை கண்டறிய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிரமாக சோதனை நடத்தினர். தொடர்ந்து, முழுமையான மீட்புப் பணிகள் முடிந்துவிட்டதை உறுதி செய்த பிறகே மீட்புப் படையினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக, கவனக்குறைவாக செயல்பட்ட கட்டட ஒப்பந்ததாரர் டேவிட் மோகன் (வயது 43) என்பவர் மீது திருவலம் போலீஸார் பி.என்.எஸ் 106(1) பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/3-died-in-katpadi-church-construction-accident-case-registered-against-contractor




