சென்னையில் உள்ள தனியார் வங்கியில், ஊழியராகப் பணியாற்றிவரும் ராஜன் (பெயர் மாற்றம்) என்பவரிடம் கொளத்தூரைச் சேர்ந்த பிரபுமணி சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமாகியிருக்கிறார். அப்போது பிரபுமணி, ‘4,500 ரூபாய் முதலீடு செய்தால் 15 நாள்களுக்குள் ஒரு கிராம் தங்கக்காசு’ கொடுக்கிறேன் எனக் கூறியிருக்கிறார். மார்க்கெட் விலையை விட பிரபுமணி குறைந்த விலைக்கு தங்க காசுக்களை கொடுப்பதாகக் கூறியதால் ராஜனும் தங்க காசுக்களை அவரிடம் வாங்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பிரபுமணி கூறிய தங்கக் காசு முதலீடு திட்டத்தில் 90 லட்சம் ரூபாய் வரை ராஜன் முதலீடு செய்திருக்கிறார். ஆனால், சொன்னபடி தங்கக்காசுக்களை தராமல் ஏமாற்றவே, ராஜன் சென்னை பொருளாதார குற்றப் பிரிவில் புகாரளித்தார். அதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு பிரபுமணியை கைது செய்தனர். தங்ககட்டிகள் அவரிடம் நடத்திய விசாரணையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி என்பவருக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜுக்கு தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கேட்டு இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஷீலா மேரியை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இந்த மோசடிக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கூறியிருக்கிறார். ஆனால் கிடைத்த ஆதாரங்கள், ஏற்கெனவே கைதான பிரபுமணி அளித்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஷீலாமேரியை கைது செய்திருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``வடசென்னையில் இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி பணியாற்றிய காலக்கட்டத்தில் அவர், தங்கக்காசு முதலீடு திட்டம் குறித்து தனக்கு தெரிந்தவர்களிடம் கூறியிருக்கிறார். அதோடு காவல்துறையைச் சேர்ந்த குடும்பத்தினரிடம் பிரபுமணியை தன்னுடைய தம்பி என்றே அறிமுகப்படுத்தி தங்கக்காசு முதலீடு திட்டத்தில் சேரும்படி சிபாரிசு செய்திருக்கிறார். இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கூறியதையடுத்து ஏராளமான போலீஸ் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இந்த தங்கக்காசு முதலீடு திட்டத்தில் சேர்ந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு குறிப்பிட்ட நாள்களுக்குள் தங்கக்காசுக்களை பிரபுமணி கொடுத்து நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறார். அதனால் இந்தத் தகவல் காட்டு தீ போல பரவி, போட்டிப் போட்டுக் கொண்டு தங்கக்காசு முதலீடு திட்டத்தில் பலர் சேர்ந்திருக்கிறார்கள். அதனால் பிரபுமணிக்கு லட்சக்கணக்கில் பணம் குவிந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து கொளத்தூர் பகுதியில் கம்பெனி ஒன்றைத் தொடங்கிய பிரபுமணி, சிலரை வேலைக்கும் அமர்த்தியிருக்கிறார். கைது இந்த முதலீடு திட்டத்தில் கிடைத்த பணத்தில் குறிப்பிட்ட தொகையை இன்ஸ்பெக்டர் ஷீலா மேரிக்கும் பிரபுமணி கொடுத்திருக்கிறார். இந்த நிலையில்தான் தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்ததையடுத்து பிரபுமணியால் தங்கக்காசுக்களை கொடுக்க முடியவில்லை. அதனால் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அந்தச் சமயத்தில் பிரபுமணிக்கு ஆதரவாக இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி சமரசம் செய்திருக்கிறார். ஆனாலும் பணம் கொடுத்தவர்களுக்கு தங்கக்காசுக்களை கொடுக்க முடியவில்லை. அதன் பிறகே இந்தப் பிரச்னை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டது. அப்போது இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக் கொண்டார். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அடுத்தடுத்து புகாரளித்தனர். ஷீலா மேரி அதனால் இந்தப் புகார் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் பிரபுமணியை முதலில் கைது செய்தோம். அவர் அளித்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் ஷீலாமேரியிடம் விசாரித்தோம். அப்போது அவர், தனக்கும் இந்த மோசடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனக் கூறினார். எங்களுக்கு கிடைத்த தகவல், ஆதாரங்கள் அடிப்படையில் மூன்றாவது குற்றம் சாட்டப்பட்டவராக இன்ஸ்பெக்டர் ஷீலா மேரியை சேர்த்தோம். அதன் பிறகு அவரை கைது செய்திருக்கிறோம். இந்த வழக்கில் வடசென்னையில் பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும், ரயில்வே போலீஸில் வேலைபார்க்கும் அவருடைய மனைவிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆதாரங்கள் கிடைத்ததும் அந்த போலீஸ் தம்பதி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/chennai-gold-coin-scam-police-inspector-arrested



