Full Article
இயற்கையின் பெருங்கொடைகளில் ஒன்றாக அறியப்படும் பாறு கழுகுகள் பறவையினம், கானகத்தின் தூய்மைக் காவலனாகப் பெரும் பங்காற்றி வருகின்றன. வனத்தில் செத்து மடியும் சடலங்களை உண்டு வாழும் இவை, இறந்த சடலங்களால் மற்ற உயிரினங்களுக்கு கொள்ளை நோய்கள் பரவாமல் முற்றாகத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை. செந்தலை, வெண்முதுகு, மஞ்சள் முகம் எனப் பல வகையான பாறு கழுகுகள் நம்மையும் நமது இயற்கை வளங்களையும் பாதுகாத்து வந்துள்ளன. பாறு கழுகுகள் குறித்து சங்கத்தமிழிலும் சான்றுகள் உள்ளன. இந்தியப் பாறு கழுகுகள் மனித தவறுகளால் தொடர்ந்து அழித்தொழிக்கப்பட்டு வந்த இந்த இனம், இன்றைக்கு கிட்டத்தட்ட அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை முதுமலை, சத்தியமங்கலம், பந்திப்பூர் புலிகள் காப்பகங்கள் மற்றும் கேரளாவின் முத்தங்கா சரணாலயம் ஆகியவற்றை உள்ளடக்கிய நீலகிரி உயிர்க்கோளக் காப்பகப் பகுதியே பாறு கழுகுகளின் கடைசிப் புகலிடமாக விளங்கி வருகிறது. கால்நடைகளுக்குச் செலுத்தப்படும் டைக்ளோ ஃபினாக் போன்ற வலி நிவாரணி மட்டுமன்றி இவற்றின் அழிவுக்கான மற்ற காரணங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டியால் பராமரிக்கப்பட்டு வந்த பாறு கழுகு ஒன்றினை கடந்த 2025- ம் ஆண்டு டிசம்பரில் ரேடியோ காலர் பொருத்தி, தடோபாவில் விடுவித்துள்ளனர். கர்நாடக வனப்பகுக்கு இடம்பெயர்ந்த அந்தப் பறவையை முதுமலை புலிகள் காப்பகத்தில் விடுவித்தனர். முதுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்பட்டு வந்த அந்தக் கழுகு, கடந்த ஞாயிற்றுக்கிழமை எப்பநாடு பகுதியில் மின்கம்பியில் மோதி பரிதாபமாக உயிரிழந்திருப்பதை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். விடுவிக்கப்பட்ட பாறு கழுகு இது குறித்து நம்மிடம் பேசிய முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள், "பாறு கழுகு பாதுகாப்பு குறித்து நாடு முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. தடோபா புலிகள் காப்பக மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பாறு கழுகுகளின் குஞ்சு ஒன்றினை தேர்வு செய்து வனத்திற்குள் விடுவிக்க முடிவு செய்யப்பட்டது. ரேடியோ கருவிகள் பொருத்தி அங்கு விடுவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. பின்னர் கர்நாடகாவில் தென்பட்டது. உடல் நலக்குறைவுடன் காணப்பட்ட இந்த கழுகை முதுமலை புலிகள் காப்பகத்தில் விடுவிப்பது சரியானதாக இருக்கும் எனக் கருதப்பட்டு, பின்னர் முதுமலையில் விடுவிக்கப்பட்டது. இங்குள்ள வெண் முதுகு பாறு கழுகுகளுடன் இணைந்து வாழும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. சீகூர் பீடபூமியின் உயரமான பகுதியை நோக்கியே சென்று கொண்டிருந்தது. அவ்வப்போது தரையில் சோர்வாகக் காணப்பட்ட இந்த பாறு கழுகு, மின்கம்பியில் மோதி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது" என்றனர். இந்த சோகம் குறித்து தெரிவித்துள்ள பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி ஆய்வாளர்கள், "பாறு கழுகுகளின் எண்ணிக்கை என்பது அதளபாதாளத்தில் இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் காடுகளுக்கு மட்டுமன்றி மனிதர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறும். இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவே பாறு கழுகுகள் பாதுகாப்பு மையம் மூலம் குஞ்சு பொரிக்கும் பறவைகளை காட்டில் விடுவித்து வருகிறோம். பாறு கழுகு தென்னிந்தியாவைப் பொறுத்தவரை முதுமலை புலிகள் காப்பகத்தில் கணிசமான அளவில் இவை வாழ்கின்றன. அந்த நம்பிக்கையில் தான் விடுவித்தோம். இந்த பறவை முதுமலை சூழலை தகவமைத்திருந்தால் அடுத்தடுத்து கூண்டுப் பறவைகளை காட்டில் விடுவிக்க நல்ல அறிகுறியாக இருந்திருக்கும். ஆனால், மின்கம்பிகள் இதற்கு அச்சுறுத்தலாக இருந்திருக்கிறது. கூண்டுப் பறவையின் வனாந்திர பெருங்கனவு மின்கம்பியில் முடிந்திருக்கிறது. இதுபோன்ற அரிய உயிரினங்கள் வாழும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புடன் மின்சாரத்தை கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வேதனை தெரிவித்துள்ளனர். குரங்குகளுக்கு பழம் கொடுத்த புது மணப்பெண்; மலை உச்சியிலிருந்து உருண்டு விழுந்து உயிரிழந்த சோகம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Full article — see link below




