மழைநீர், வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் பல அணைகள் கட்டப்பட்டது, தமிழகத்தை ஆட்சி செய்த மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராசர் ஆட்சி காலத்தில்தான். அவர் ஆட்சி செய்த 9 ஆண்டுகளில் ஆழியாறு, அமராவதி, வைகை, மணிமுத்தாறு, கீழ்பவானி, சாத்தனூர், கிருஷ்ணகிரி, வீடூர் போன்ற பல அணைகளைக் கட்டிக் கொடுத்துள்ளார். இதில் இன்றளவும் நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு பயனளித்து வருகின்றது மணிமுத்தாறு அணை. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு என்ற பகுதியில் உள்ள பச்சையாறுதான் மணிமுத்தாறு அருவியின் பிறப்பிடம். இந்த ஆறு, அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி வழியாக தாமிரபரணி ஆற்றில் கலந்து விடுகிறது. மணிமுத்தாறு அணை மழைக்காலங்களில் அதிகளவு நீர் சேர்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீணாக கடலில் கலந்து வந்தது. இதனைத் தடுத்து, விவசாயிகளுக்கு உதவும் விதமாக மணிமுத்தாறு ஆற்றின் குறுக்கே மணிமுத்தாறு அணை கட்டப்பட்டது. இந்த அணை, கடந்த 1958-ம் ஆண்டு, சிங்கம்பட்டி அருகே 118 அடி ஆழத்தில், 3 கி.மீ., நீளத்துடன் கட்டப்பட்டது. 5,511 மில்லியன் கனஅடி நீரைத் தேக்கி வைக்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்டது. இந்த அணை கட்டப்படும் போது சில விவசாயிகள் தங்கள் விளைநிலங்களைத் தானமாக கொடுத்திருக்கிறார்கள். இந்த அணை கட்டப்பட்டு 68 ஆண்டுகள் மேலாகியும் இன்று வரை அசராமல் விவசாயிகளின் பாசனத் தேவையையும், பொதுமக்களின் குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. சுமார் 67,600 ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த அணையின் மூலம் பாசன வசதியைப் பெறுகின்றன. இந்த அணையைக் கட்டி, திறந்து வைத்த காமராசருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. தற்போது அந்த நினைவுத்தூண் பராமரிப்பின்றி முட்புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது. காமராசரின் 124வது பிறந்தநாள் இன்று தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், அவரின் சாதனையைப் போற்றும் இந்த நினைவுத்தூணின் அவல நிலையை நினைத்தும், முட்புதர்களை அகற்ற வலியுறுத்தியும் கோரிக்கை விடுத்துள்ளனர் சமூக ஆர்வலர்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/kamarajars-124th-birth-anniversary-the-manimutharu-dam-memorial-pillar-overgrown-with-thorny-bushes




