சென்னை, தமிழக சட்டசபையில் இன்றைய அவை நடவடிக்கையின்போது எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு வாகனம் வழங்கப்படுவது குறித்து சட்டசபையில் மீண்டும் அனல் பறந்த விவாதம் நடந்தது. முதலில் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கூறுகையில், விவசாய கடன் முழுவதும் தள்ளுபடி செய்யவில்லை. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல் எம்.எல்.ஏ.க்களுக்கு கார் கொடுத்து என்ன பயன்? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், “காரை எடுத்துக்கொண்டு தொகுதிக்கு செல்ல வேண்டும். தொகுதியை சுற்றி வந்து ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு பணி செய்யவே எம்.எல்.ஏ.க்களுக்கு கார் கொடுக்கப்படுகிறது” என்றார். தொடர்ந்து அவை முன்னவர் செங்கோட்டையன் கூறுகையில், “அரசு கொடுக்கின்ற காரில் போகிறபோது அதற்கு தனி மரியாதை இருக்கும். திமுகவினர் கார் ரேசுக்கு ரூ.24 கோடி செலவு செய்தீர்கள். அது யார் அப்பா வீட்டு காசு?” என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு, “நீங்கள் (செங்கோட்டையன்) விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.10 கோடிக்கு எதுவுமே செய்யாமல் அந்த பணத்தை அப்படியே வைத்திருந்தீர்கள். நாங்களும் உங்களை போலவே செயல்பட வேண்டுமா?” என்றார். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “எந்தெந்த எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் வாங்கிக்கொடுங்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவின்படி திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம் என தெரிவித்தார். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறுகையில், “திமுகவினர் தாங்கள் வசதியாக இருப்பதால் கார் வேண்டாம் என்கிறார்கள். அதனால் கார் இல்லாதவர்கள் மட்டும் பெற்றுக்கொள்ளலாம், கார் இருப்பவர்கள் அவரவர் காரிலேயே சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொள்வார்கள்” என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் அருண்ராஜ், அரசு கஜானாவில் பணமில்லை, அதனால் எம்.எல்.ஏ.க்களுக்கு கார் கொடுக்க வேண்டாம் என்று திமுகவினர் சொல்கிறார்கள். ஆனால் கடந்த ஆட்சியில் கலைஞருக்கு கடலில் பேனா வைக்க வேண்டும் என்று சொன்னீர்களே, அப்போது மட்டும் நிதி இருந்ததா?’ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த திமுக கொறடா எ.வ.வேலு, “மத்திய அரசு கலைஞருடைய பேனா சிலையை வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதி தந்தது. ஆனால், எங்களுடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த சூழலில் அது தேவையா? என்று கேட்டதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பொருளாதாரம் எப்போது சீர் ஆகிறதோ. அப்போது வைத்துக் கொள்ளலாம். தற்போது வேண்டாம் என்று சொன்னார். இது அனைவரும் அறிந்தது.” என்றார். இவ்வாறு சட்டசபையில் மீண்டும் அனல் பறந்த விவாதம் நடந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/government-vehicles-for-mlas-heated-debate-in-the-assembly-once-again




