அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலி கிராமத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் கடந்த 11ம் தேதி சுமார் இரண்டு மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது மூடியிருந்த டாஸ்மாக் கடை மீது கல் வீசியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து போலீஸார் டாஸ்மாக் கடை முன்பு திரண்டிருந்தவர்களை விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டாஸ்மாக் அப்போது, சில மாணவிகளை போலீஸார் அடித்து விட்டதாக சொல்லப்படுகிறது. சில மாணவிகள் தரையில் படுத்து கொண்டிருக்க அங்கிருந்த பெண்கள் அதிர்ச்சியும், ஆக்ரோஷமுமாக பேசினர். இது குறித்து வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில் போலீஸ் யாரையும் அடிக்கவில்லை, போராட்டத்தை கவனப்படுத்த போலீஸார் அடித்து விட்டதாக சொல்கிறார்கள் என்று ஒரு தரப்பும், போலீஸ் அடித்ததில் பாதிக்கப்பட்ட மூன்று மாணவிகள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டதாக போராட்டக் குழு தரப்பிலும் பேசப்படுவதால் இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பெரியசாமி என்பவர் நம்மிடம், ``கோடாலில் கிராமத்தில் சுமார் பத்து வருடங்களாக இந்த டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அரசுப்பள்ளிகள், கோயில் உள்ளிட்டவை இருக்கும் பகுதியில் டாஸ்மாக் கடை இருந்ததால் அனைத்து தரப்பினரும் பலவித இன்னல்களுக்கு ஆளாகினர். டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் ஆங்காங்கே அமர்ந்து மது குடிப்பார்கள். அப்போது அவ்வழியாக செல்லும் பெண்கள், மாணவிகளை கேலி கிண்டல் செய்வார்கள். போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸ் டாஸ்மாக் கடை மூடியிருக்கும் நேரத்தில் அங்குள்ள பாரில் சட்டவிரதோதமாக மது விற்பனை நடக்கும். இது குறித்து அதிகாரிகள் மற்றும் போலீஸாருக்கு தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடைக்கு அருகாமையில் மூன்று பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர். 24 மணி நேரமும் தடையின்றி மது கிடைத்ததால் எப்போது என்ன நடக்கும் என்று தெரியாமல் மக்கள் பதைபதைப்புடன் வாழ வேண்டிய சூழல் இருந்தது. இந்நிலையில், மக்களின் நிம்மதியை கெடுக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். மேலும், டாஸ்மாக்கை அகற்றுவதற்கு பல வகையில் முயற்சி எடுத்தோம். பல ஆண்டுகளாக தொடர்ந்த எங்கள் போராட்டத்திற்கு பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் திரண்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது கடை முன்பு திரண்டவர்களை போலீஸார் விரட்டினர். டாஸ்மாக் கடையை பாதுகாக்க காட்டிய அக்கறையை போலீஸார் மாணவர்கள் மீது காட்டவில்லை. மாணவர்கள் போராட்டம் போலீஸ் துரத்தியதில் மாணவர்கள் அலறியடித்து ஓடினர். பின்னர், அதிகாரிகள் மற்றும் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து, பத்து ஆண்டுகளாக இயங்கிய டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. உரிய ஆணை பிறப்பித்து நிரந்தரமாக மூட வேண்டும்" என்றார். இதே போல் ஜெயங்கொண்டம் பகுதிகளில் ஐந்து கிராமங்களில் மக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என கடந்த ஒரு மாதமாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கோடாலி டாஸ்மாக் கடை உட்பட ஆறு கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தா.பழூர் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜிடம் பேசினோம், ``போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினோம். அப்போது அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பீஸ் கமிட்டி மூலம் பேச்சு வார்த்தை நடத்தி கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. பள்ளி மாணவர்களை போலீஸ் அடித்தாக வரும் செய்திகள் உண்மையில்லை" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/tasmac-shop-protest-police-controversy




