பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி நிலம் மோசடியாக தனி நபர்கள் பெயருக்கு பதிவு செய்ய முயன்ற சம்பவம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளார் சசிகலா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் நிலத்தை விற்க முயன்றதாக முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி, அன்வர்தீன் மற்றும் ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீஸார் 4 பேரை கைதுசெய்திருக்கின்றனர். இதில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் ஜாமீன் பெற்றுள்ளதோடு கடந்த நான்கு நாள்களாக சிபிசிஐடி போலீஸார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நில மோசடி தொடர்பாக இதுவரை 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 84 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என அன்னபூரணி சிவகுமார், பழனி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, பிரதீப் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்திருந்தார்கள். ஜஸ்டின் மணிகண்டன் இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வந்தது. அப்போது, ‘எதன் அடிப்படையில் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள்?' என சிபிசிஐடி தரப்பிலும், அரசு தரப்பிலும் கேள்வி எழுப்பப்பட்டது. மனுதாரர் தரப்பில், ‘அரசு அலுவலர்களோடு இணைந்தே இந்த முறைகேடுகள் எல்லாம் செய்யப்பட்டிருக்கிறது' எனத் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில், ``விசாரணைக்கு முன்பாக மனுதாரர்கள் இவ்வாறு வழக்கு தொடர்பாக தொடர்வதற்கு தகுதியை உறுதி செய்ய வேண்டும். பழனி மடத்தின் அறங்காவலர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒருவர், இதில் வழக்கு பதிவு செய்திருக்கிறார். ஆனால் அவர் அறங்காவலர் குழுவை சேர்ந்தவரா?” என கேள்வி எழுப்பினார்கள். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கோயில் நிர்வாகம் தரப்பில், “அன்னபூரணி சிவகுமார் மடத்தின் அறங்காவலர் அல்ல. அவர் கோயிலின் அறங்காவலர் குழுவில் ஒருவராக இருக்கிறார்” எனக் கூறினார்கள். அதையடுத்து நீதிபதிகள், ``தற்போது வழக்கு விசாரணை என்ன நிலையில் இருக்கிறது என்பதை முதலில் பார்த்துக் கொள்வோம்; அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்” எனக் கூறி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5 தேதிக்கு ஒத்தி வைத்தார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/court-orders-cb-cid-to-file-a-report-on-the-status-of-the-palani-temple-land-fraud-case




