சட்டமன்ற தேர்தல் படுதோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்ட, அதைப் புறக்கணித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீண்ட இடைவெளிக்கு பின், சென்னையில் நடைபெற்ற வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``கரூரில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் விஜய் பேசியது வழக்கம் போல எழுதப்பட்ட ஒரு சினிமா ஸ்கிரிப்ட்தானே தவிர, அதில் புதிய விஷயம் எதுவும் இல்லை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர் ராஜதந்திரத்துடனும், பொறுப்புடனும் பேச வேண்டும். ஆனால், முதலமைச்சர் விஜய் பொதுவெளியில் ஒரு சினிமா நடிகர் 'ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்' என்று சொன்னவுடன் நடிப்பது போல, தனக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட வசனங்களை மேடையில் ஒப்பித்துவிட்டுச் சென்றுள்ளார். முதல்வர் விஜய் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றித் தவிக்கும் சூழலில், தற்போதைய முதலமைச்சரின் செயல்பாடுகள் அனைத்தும் வரவிருக்கும் இடைத்தேர்தலை மட்டுமே மனதில் கொண்டு திட்டமிடப்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் 'வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை தருவோம்' என்று வாக்குறுதி அளித்த இந்த அரசு, ஆட்சிக்கு வந்து இத்தனை நாட்களாகியும் அதனை நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் தற்போது 3 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்புவதற்கு எவ்வித உருப்படியான நடவடிக்கையும் எடுக்காமல், முதலமைச்சர் மௌனம் காக்கிறார். கரூருக்குச் சென்ற முதலமைச்சர், டெல்டா விவசாயிகளின் முக்கியப் பிரச்னையான குறுவை மற்றும் சம்பா சாகுபடி குறித்துப் பேசாதது ஏன்? ஜூன் மாதக் குறுவை சாகுபடிக்கு 9.90 டிஎம்சி தண்ணீரும், ஜூலை மாதத்திற்கு 30 டிஎம்சி தண்ணீரும் தேவைப்படும் நிலையில், அதைப் பெற்றுத் தர எந்தவொரு வலுவான முயற்சியையும் முதலமைச்சர் எடுக்கவில்லை. TNPSC தேர்வுக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் பகல், இரவாகப் படித்துக் கொண்டிருக்கும் வேளையில், தங்களுக்கு வேண்டிய 32 பேருக்கு மட்டும் நேரடியாக அரசுப் பணி வழங்கியிருப்பது நியாயமற்றது. இது தேர்வர்களின் வாய்ப்பைப் பறிக்கும் செயல். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 1958 முதலே தான் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு வாரி வாரி வழங்கினார். ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர் ஆனால், 1983-ல் சினிமாவுக்கு வந்த விஜய், கோடி கோடியாகச் சம்பாதித்த பணத்திலிருந்து பாதிக்கப்பட்ட இந்த 32 குடும்பங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி, அதை வங்கியில் டெபாசிட் செய்ய வைத்திருக்கலாம். அதை விடுத்து அரசுப் பணியை வாரி வழங்கியது ஏன்? சமூகத்தை அரித்துக்கொண்டிருக்கும் கரையான் போன்ற ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் ஊழலைப் பற்றிப் பேச முதலமைச்சருக்கு எந்த தகுதியும் இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களையும், தங்களுக்குச் சாதகமானவர்களையும் பக்கத்தில் வைத்துக் கொண்டே ஊழலை ஒழிப்போம் என்று முதலமைச்சர் பேசுவது, 'கோழி திருடனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊரெல்லாம் தண்டோரா போட்ட கதையாக' இருக்கிறது. தான் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்பதை மறந்து, இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எள்ளி நகையாடக்கூடிய வகையிலும், அருவருக்கத்தக்க வகையிலும்தான் முதலமைச்சரின் கரூர் பேச்சு அமைந்திருந்தது." என்றார். ``ஒரிஜினல் களவாணி முதல்வர் விஜய்தான்: திமுக - அதிமுக கூட்டனி?" - டிடிவி தினகரன் `பளிச்' பதில்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/aiadmks-jayakumar-has-criticized-chief-minister-vijays-speech-in-karur




