பெரியபாளையம், சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். கோவிலுக்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து இறந்தார். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்தில் உள்ள சிறுவாபுரி கிராமத்தில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. ஆனி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக குவிந்தனர். பொது தரிசனத்திற்காக பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து, கல் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த முருகப்பெருமானை தரிசித்தனர். முன்னதாக மூலவருக்கு பால், தயிர், விபூதி, சந்தனம், ஜவ்வாது, இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பூக்களால் கல் அங்கி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. முதியவர் உயிரிழப்பு சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 67), சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, செங்குன்றம் அருகே நல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ராஜேந்திரனுக்கு ஏற்கனவே இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், தற்போது மூன்றாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆரணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/devotees-gathered-at-siruvapuri-murugan-temple-elderly-man-faints-and-dies




