வாஷிங்டன், நேபாளத்துக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். நேபாளத்தில் நேற்று முன் தினம் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், அங்குள்ள மத்திய மாவட்டங்களை உருக்குலைந்து உள்ளது. திபெத்தின் இமயமலை பகுதியில் உருவாகும் கோலா ஆறு, நேபாளம் எல்லைப்பகுதி வழியாக பாய்ந்து நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தை அடைகிறது. அதன்பின் சிறு ஆறுகளுடன் இணைந்து ரசுவா பகுதியில் போடே கோஷி ஆறாக ஓடுகிறது. இதற்கிடையே பனிச்சரிவு காரணமாக லெண்டே கோலா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நேபாளத்தை நோக்கி அசுர வேகத்தில் பாய்ந்தது. சுமார் 30 அடி உயரத்தில் பாறைகள், மண் உள்ளிட்டவைகளுடன் சீறி வந்த காட்டாற்று வெள்ளம் நேபாளத்தின் ரசுவா, தாடிங் ஆகிய மாவட்டங்களில் ஓடும் போடே கோஷி ஆற்றில் நுழைந்தது. அந்த ஆற்றின் வழியாக திரிசூலி ஆற்றில் கலந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கட்டுக்கடங்காமல் சென்ற காட்டாற்று வெள்ளம் ஆறுகளின் இருபுறமும் உள்ள வீடுகள், பெரிய கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள், வாகனங்கள், மின் நிலையங்களை அடித்து சென்றது. இதில் ஒரு கிராமத்தை சில வினாடிகளில் வெள்ளம் வாரி சுருட்டி சென்றது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் 32 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அடித்து செல்லப்பட்டனர். இதனையடுத்து மீட்புப்பணிகளில் நேபாள ராணுவம், போலீசார் மற்றும் மீட்புக்குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் நேபாள காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெள்ளிக்கிழமை மாலை 3 மணி நிலவரப்படி 547 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நுவாகோட், ரசுவா, தாடிங், சித்வான், கோர்க்கா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வெள்ளப் பெருக்கில் சிக்கி 1,473 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிகிச்சை முடிந்து 94 பேர் வீடு திரும்பியுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 4,473 காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நேபாளத்துக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்து உள்ள நேபாளத்தை நாங்கள் தொடர்புகொண்டு அவர்களுக்கு தேவையான எந்தவொரு உதவியையும் வழங்குவதாக கூறியுள்ளோம். நேபாளத்துடன் எங்களுக்கு மிக சிறந்த உறவு உள்ளது. இது ஒரு கொடூரமான நிகழ்வு. அது வெறும் வெள்ளம் மட்டுமல்ல, சேறும் நீரும் கலந்த ஒரு பேரழிவு. இதுபோன்ற ஒன்றை யாரும் பார்த்திருக்க முடியாது. மிகவும் வலிமையான உறுதியான கட்டிடங்கள் கூட தீக்குச்சிகளை போல அடித்து செல்லப்பட்டன. இது மிகவும் மோசமான ஒரு நிகழ்வு. நாங்கள் உதவிகளை அனுப்பி வருகிறோம். அவர்களுக்கு என்ன தேவையோ அதை வழங்குவோம் என்று அந்நாட்டு தலைவர்களிடம் தெரிவித்துள்ளோம் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/trump-announces-us-will-provide-all-assistance-to-nepal




