கோரமங்களா, பெங்களூரு கோரமங்களா பகுதியில் ஓடும் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பெங்களூரு கோரமங்களா பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி(வாட்டர் டேங்க்) சந்திப்பு அமைந்துள்ளது. இந்த பகுதியின் வழியாக நேற்று அதிகாலையில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரில் டிரைவருடன் சேர்த்து 3 பேர் பயணம் செய்தனர். இந்த நிலையில் கார் வாட்டர் டேங்க் சந்திப்பு அருகே வந்தபோது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேற தொடங்கியது. தீ இதனை பார்த்த கார் டிரைவர் உடனடியாக சாலையோரத்தில் காரை நிறுத்தினார். பின்னர் காரில் இருந்தவர்கள் விரைந்து காரில் இருந்து கீழே இறங்கினர். அவர்கள் இறங்கிய சில நிமிடங்களில் காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிய தொடங்கியது. மேலும் மளமளவென பரவிய தீ கார் முழுவதும் பிடித்து கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனை பார்த்த காரின் உரிமையாளர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர். தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த காரின் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தனர். மேலும் பல மணி நேரம் போராடி காரில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் கார் முழுவதும் தீ பரவியதால் கார் எலும்புக்கூடாக மாறியது. இந்த தீ விபத்தால் அகர்-சர்ஜாபுரா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வழக்குப்பதிவு இதுகுறித்து அறிந்த கோரமங்களா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் சாலையில் எலும்புக் கூடாக நின்ற, காரை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/a-car-caught-fire-in-bengaluru-3-people-escaped-unhurt




