அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9 மாணவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தருமபுரி தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே தொ.காணிகரஅள்ளியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. 114 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் நேற்று முன் தினம் கழிவறைக்கு சென்ற 9 மாணவர்கள் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு, இந்த சம்பவத்தை பள்ளி ஆசிரியர்கள் மறைத்ததாக புகார் எழுந்த நிலையில் பெற்றோர்கள் பள்ளி முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி முன் திரண்ட பெற்றோர்கள் இதுகுறித்து விசாரித்தபோது, கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது இப்பள்ளி வாக்குப்பதிவு மையமாக செயல்பட்டது. அப்போது தேர்தல் பணியாளர்கள் தங்குவதற்காக பள்ளியில் ஒரு வகுப்பறை ஒதுக்கப்பட்டதாகவும், அங்கு போதிய மின் வசதி இல்லாததால் தற்காலிகமாக மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும், தேர்தல் முடிந்த பின்னரும் அந்த இணைப்பு வயர் அகற்றப்படாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. காற்றில் அசைந்த மின் வயர் சேதமாகி கழிப்பறை இரும்புக் கதவில் உரசியபடி இருந்ததால் சம்பவம் நடந்த அன்று அங்கு வந்த மாணவர்கள் 9 பேருக்கும் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்துள்ளனர். உடனடியாக அவர்களை மீட்ட ஆசிரியர்கள் சிகிச்சைக்காக தொப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதில் இரண்டு மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மற்ற மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலுக்காக ஏற்படுத்தப்பட்ட தற்காலிக மின் இணைப்பை அகற்றாமல் ஆசிரியர்கள் அலட்சியம் காட்டியதே இந்த சம்பவத்திற்கு காரணம் என பெற்றோர்கள் புகார் தெரிவித்து பள்ளி முன் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்பு தொடக்க கல்வி அலுவலர் விசாரணை நடத்தி தலைமையாசிரியர் உட்பட 3 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டார். இந்த சம்பவத்தை உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் மறைக்க நினைத்த தலைமை ஆசிரியர் குறித்து பெற்றோர் தரப்பில் புகார் எழுந்ததால் தருமபுரி கலெக்டர் சரவணன் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியதை தொடர்ந்து, தலைமையாசிரியர் செந்தாமரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/school-students-affected-due-to-electricity-attack-in-dharmapuri




