ராமேசுவரம், ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள 21 தீவுகளை சுற்றிய கடல் பகுதியில் சுமார் 3,600 வகையான கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. குறிப்பாக தனுஷ்கோடி முதல் பாம்பன், மண்டபம் வரையிலான கடல் பகுதியில் டால்பின்கள் அதிகம் உள்ளன. இந்த நிலையில் தனுஷ்கோடி தெற்கு கடற்கரை பகுதியில் நேற்று டால்பின் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கி கிடப்பதாக வனத்துறையினருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர், அந்த டால்பினை பார்வையிட்டனர். அது உயிருக்கு போராடிய நிலையில் துடித்து கொண்டிருந்தது. உடனடியாக வனத்துறையினர் கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்தனர். கரை ஒதுங்கி கிடந்தது பெண் டால்பின் ஆகும். சுமார் 7 அடி நீளமும், 200 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் டால்பினை அதில் இருந்து பாதுகாக்க வனத்துறையினர் அதன்மேல் சிறிய தார்ப்பாயை பிடித்தபடி நிழல் அமைத்து கொடுத்தனர். தொடர்ந்து அங்கு வந்த கால்நடை டாக்டர், டால்பினுக்கு சிகிச்சை அளித்தார். அந்த டால் பினை மீண்டும் ஆழ்கடலில் கொண்டு சென்று விடும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, "கடலுக்குள் பெரும்பாலும் டால்பின்கள் கூட்டமாகவே திரியும். மீன்களை வேட்டையாடியபோது காயம் ஏற்பட்டு தொடர்ந்து நீந்த முடியாமல் இந்த டால்பின் கரை ஒதுங்கி இருக்கலாம்" என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/200-kg-dolphin-washed-ashore-alive-in-dhanushkodi-forest-department-tries-to-release-it-back-into-the-deep-sea




