சென்னை, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் கர்நாடக அரசு மதிக்கவில்லை என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;- “தமிழக முதல்-அமைச்சர் விஜய் தற்போது கர்நாடகத்திற்கு வர வேண்டாம் என அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கோரிக்கை வைத்துள்ளார். கடந்த 20 நாட்களில் கர்நாடக அரசிடம் தண்ணீர் திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை வாரியம் 2 முறை வலியுறுத்தியது. ஆனாலும் கர்நாடக அரசு அதை கேட்கவில்லை. கடந்த ஜூன் மாதம் தமிழகத்திற்கு 9.1 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் நமக்கு கிடைத்ததோ 2.1 டி.எம்.சி. மட்டுமே. அதே போல் ஜூலை மாதம் நமக்கு 3.2 டி.எம்.சி. தண்ணீருக்கு பதிலாக 0.4 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் கர்நாடக அரசு மதிக்கவில்லை. இப்படி மதிக்காத கர்நாடக அரசிடம் சென்று பேசுவதில் எந்த பயனும் கிடையாது. காவிரியில் தண்ணீர் வரவில்லை, மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறந்திருக்க வேண்டும், ஆனால் இன்றுவரை திறக்கப்படவில்லை. குறுவை சாகுபடி முடிந்துவிட்டது, சம்பாவுக்கு தண்ணீர் இருக்குமா என்று தெரியவில்லை. மேட்டூர் அணையில் சுத்தமாக தண்ணீர் இல்லை. ஆனால் கர்நாடக அணைகளில் 67 டி.எம்.சி. தண்ணீர் இருக்கிறது. ஒரு நல்லெண்ணத்திற்காக தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. தண்ணீராவது திறந்துவிடுகிறார்களா என்றால் அதுவும் இல்லை. இந்த சூழலில் கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்து தமிழக முதல்-அமைச்சர் என்ன பேசப்போகிறார்?” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-point-in-talking-to-the-karnataka-government-which-shows-no-respect-anbumani-ramadoss




