தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார். இவரது உடன்பிறந்த தம்பியான மரிய கிளோத் புதுச்சேரி எழில் நகரில் வசித்து வருகிறார். மரியவில்சனுக்கும், அவரது தம்பிக்கும் சொத்து மற்றும் தொழில் விவகாரத்தில் நீண்ட நாள்களாகப் பிரச்னை இருந்திருக்கிறது. அதனால் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தந்தை நெஸ்தருடன் புதுச்சேரிக்கு வந்த மரியவில்சன், தம்பி வீட்டுக்குள் உருட்டுக்கட்டையுடன் நுழைந்து அவர்களைத் தாக்கியிருக்கிறார். அதையடுத்து மரியவில்சனின் தம்பி மனைவி கேர்லின் கிளாட், லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மரியவில்சன் அந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதன் விசாரணைக்காக அமைச்சர் மரியவில்சன் நேற்று ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், அவர் ஆஜராகவில்லை. அதில் கடுப்பான நீதிபதி, ``பலமுறை அவர்களுக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல், திரும்பத் திரும்ப அவகாசம் கேட்பது ஏன்?" என்று கேட்டதுடன், ஜூலை 10-ம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணையை 10-ம் தேதிக்குத் தள்ளி வைத்தார். அதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் பேசிய அமைச்சர் மரியவில்சனின் தம்பி மரிய கிளோத், ``தமிழ்நாடு அரசின் நிதித்துறை அமைச்சர் மரியவில்சனின் சொந்த சகோதரன் நான். கடந்த 2022-ம் ஆண்டு புதுச்சேரியிலுள்ள என் வீட்டுக்கு வந்த மரியவில்சன், எங்கள் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தினார். அது தொடர்பாக நாங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதிலிருந்து அந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று எங்களுக்கு பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வருகிறார் மரியவில்சன். மேலும் என் மீதும், என் மனைவி மீதும் பல்வேறு வழக்குகளைப் போட்டிருக்கிறார். ஆனாலும் சட்டரீதியாகவே நாங்கள் அனைத்தையும் அணுகினோம். அனைத்து அழுத்தங்களையும் தாண்டி நாங்கள் சென்று கொண்டிருப்பதற்குக் காரணம், நீதித்துறை மீது எங்களுக்கு இருக்கும் பெரிய நம்பிக்கைதான். நாங்கள் இருக்கவே கூடாது என்று நினைக்கும் ஒருவரிடம் இருந்து தப்பித்து, எப்படியே எங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்தத் தாக்குதலுக்குப் பிறகு நாங்கள் எங்கு மறைந்து வாழ்ந்தோம் என்பது எங்கள் குடும்பத்துக்கே தெரியாது. நிதியமைச்சர் மரியவில்சன் புதுச்சேரியில் இருந்து வெளியேறி தமிழகத்தில் மறைந்து வாழ்ந்தோம். அங்கும் அரசியல் சூழல் மாறியதால், பாதுகாப்புக்காக வெளிநாட்டிலும் சில நாட்கள் தங்கியிருந்தோம். எங்கள் மீதான அக்கிரமத் தாக்குதலுக்கு சட்டரீதியிலான நீதி வேண்டும். மரியவில்சனின் சகாக்கள் எங்களுக்கு ஏகப்பட்ட நெருக்கடியைக் கொடுத்தார்கள். குறிப்பாக உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாஸ்கர். கட்டப்பஞ்சாயத்துதான் அவரது தொழில். எங்கள் மீது ஏகப்பட்ட பொய் வழக்குகளைப் போட்டார். புதுச்சேரியிலும் எங்களுக்குப் பாதுகாப்பில்லை. அதனால்தான் வேறு மாநிலத்தில் இருக்கிறோம். அந்த வழக்கின் விசாரணைக்காகத்தான் இன்று ஆஜரானோம். ஆனால் மரியவில்சன் ஆஜராகவில்லை" என்றார். `திரும்பத் திரும்ப அவகாசமா?’ - அடிதடி வழக்கில் அமைச்சர் மரியவில்சன் தரப்பிடம் கடுகடுத்த நீதிபதி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/a-shocking-statement-by-tamil-nadu-finance-minister-marie-wilsons-brother




