சென்னை, வடக்கு நேபாளத்தில், ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக எல்லை நதி ஒன்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இத்துயரச் சம்பவத்தில் இதுவரை 162 பேர் உயிரிழந்ததுடன், சாலைகள் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் தனியார் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன. தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெள்ளப்பெருக்கில் சிக்கி இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு இருப்பதாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களை பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், குரோம்பேட்டை மகாதேவ் கைலாஷ் ஏஜென்சி மூலம் கடந்த 14-ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 49 பேர் நேபாளம் பயணம் மேற்கொண்டுள்ளனர். யாத்திரையை முடித்துவிட்டு தாயகம் திரும்ப நேற்று குடியுரிமை அலுவலகம் சென்ற 49 பேர் குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை. இதனால் 49 பேரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருப்பார்களா என்ற அச்சம் எழுந்துள்ளது. தேனியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இந்த பயணத்தில் இருந்த நிலையில், அவர்களும் காணாமல் போயிருக்கிறார்கள். சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தீனதயால், ஈக்காட்டுத் தாங்கல் பகுதியிலிருந்து விக்ரமன், மஞ்சுளா, குரோம்பேட்டையிலிருந்து 6 பேர், காஞ்சிபுரத்திலிருந்து 6 பேர் என 49 பேர் நேபாளம் சென்றிருந்த நிலையில் காணாமல் போயுள்ளனர். மேலும் நாமக்கல்லிலிருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 பேரும் நேபாளம் சென்று காணாமல் போயிருக்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இவர்கள் சென்னையிலிருந்து நேபாளம் சென்று, அங்கு வெள்ளப்பெருக்கில் காணாமல் போயிருப்பது அவர்களது உறவினர்களுக்கு பெரும் துயரத்தை அளித்துள்ளது. மகாதேவ் கைலாஷ் ஏஜென்சிஅலுவலகத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். நேபாளம் சென்றவர்கள் விவரங்கள், அவர்களை கடைசியாக தொடர்பு கொண்டது எப்போது? என்பது போன்ற விவரங்களை திரட்டி வருகிறார்கள்.மேலும் மாயமானோர் குறித்து அரசு சார்பில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கும்பகோணத்தில் இருந்து நேபாளம் சென்ற 57 பேரில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-floods-no-information-on-another-49-tamils




