புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வீரப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக மணிபாலா (59 வயது) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று அதே பகுதியை சேர்ந்த தச்சு தொழிலாளி மருதுபாண்டியன் (33 வயது) என்பவர் தான் குடும்பத்துடன் புதுக்கோட்டைக்கு செல்ல இருப்பதாக கூறி அங்கு படிக்கும் தனது மகன்களின் பள்ளி மாற்றுச்சான்றிதழை (டி.சி.) பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டுள்ளார். அப்போது மருதுபாண்டியன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பள்ளி தலைமையாசிரியர் நீங்கள் நிதானமாக இல்லை. எனவே உங்களது மனைவியை அழைத்து வாருங்கள், மாற்றுச்சான்றிதழ் தருகிறேன் என கூறியுள்ளார். அப்போது மருதுபாண்டியன் 'பள்ளியில் சேர்க்கும்போது ஒருவர் வந்து சேர்த்தால் போதும். இப்போது மாற்றுச்சான்றிதழ் வாங்கும்போது இருவர் வந்து வாங்க வேண்டுமா? இப்போதே மாற்றுச்சான்றிதழை தர வேண்டும்' என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த இடைநிலை ஆசிரியர் ஜெரால்டு (38 வயது), மருதுபாண்டியனிடம் சத்தம் போட வேண்டாம் என்று கூறி அவரை சமாதானம் செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மருதுபாண்டியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆசிரியர் ஜெரால்டை தனது செல்போனால் தலை மற்றும் நெஞ்சில் தாக்கி உள்ளார். மேலும், மாணவர்கள் முன்பு தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அவரது சட்டையை கிழித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியர் ஜெரால்டு உள்பட 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அன்னவாசல் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அதன் பேரில் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை தாக்கிய மருதுபாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-arrested-for-assaulting-government-school-teacher




