வத்திராயிருப்பு, சதுரகிரி மலையில் மீண்டும் காட்டுத்தீ பரவியதால் இன்று ஆடி அமாவாசை தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டிருந்தது. ஆடி அமாவாசை திருவிழா விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி கடந்த 10-ந் தேதி முதல் நாளை (வியாழக்கிழமை) வரை பக்தர்கள் மலை ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. சதுரகிரி மலையேற தடை இந்நிலையில் சதுரகிரி அருகே சாப்டூர், வத்திராயிருப்பு ஆகிய வனப்பகுதிகளில் பற்றிய காட்டுத்தீ நேற்று முன்தினம் மாலை சதுரகிரி மலையின் கீழ் பகுதிக்கு பரவியது. இதையடுத்து பக்தர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நேற்று பக்தர்கள் சதுரகிரி மலையேற தடை விதித்து மதுரை, விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் உத்தரவிடப்பட்டது. மீண்டும் காட்டுத்தீ காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். நேற்று பிற்பகலில் காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு 7 மணி அளவில் சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு அருகே உள்ள தவசிப்பாறை சந்தையூர் படிவெட்டி பகுதியில் மீண்டும் காட்டுத்தீ பற்றி பரவியதால் அதனை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். எனவே பக்தர்கள் பாதுகாப்பு கருதி இன்று (புதன்கிழமை) சதுரகிரிக்கு ஆடி அமாவாசை தரிசனத்துக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், இயல்பு நிலை திரும்பும் வரை இதுதொடரும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் போராட்டம் இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சதுரகிரிக்கு செல்ல நேற்று ஏராளமான பக்தர்கள் வந்து, தாணிப்பாறை அடிவார பகுதிகளில் குவிந்தனர். தங்களுக்கு மலை ஏற அனுமதி வழங்க வேண்டும் என கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஏராளமான பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. மீண்டும் அனுமதி இந்நிலையில் ஆடி அமாவாசை நாளான இன்று (புதன்கிழமை) சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலையில் பரவும் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாலை முதல் காத்திருந்த ஏராளமான பக்தர்கள் தற்போடு சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மலையேறி வருகின்றனர். இன்று ஆடி அமாவாசை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கானோர் மலையேறி சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/devotional/devotees-are-permitted-to-climb-the-sathuragiri-hills-today-the-day-of-aadi-amavasai




