காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் காத்யாயனி அம்மன் கோவில் உள்ளது. திருமண கனவை நனவாக்கும் சக்தி கொண்டவர் காத்யாயனி என்னும் மகாசக்தி. இந்த அம்பிகையை வழிபட்டு வந்தால் வெகு விரைவில் திருமணம் நடைபெற்றுவிடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பிரார்த்தனை முறை திருமணத் தடையால் கவலைப்படுபவர்கள், மூன்று முறை இக்கோவிலுக்கு வந்து திருமண அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும். குடும்பப் பிரச்சினை, உறவினர்களால் பிரச்சினை, பொருளாதார பிரச்சினை போன்றவற்றால் தடைப்பட்ட திருமணம் கைகூட, இந்த அம்பிகையின் சன்னிதியில் வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் பவுர்ணமி ஆகிய தினங்களில் ஒரு நாள் என மூன்று முறை சென்று திருமணப் பேறு வேண்டி அர்ச்சனை செய்து வணங்க வேண்டும். * முதல் வாரம்- காத்யாயனி பூஜை: இரண்டு தேங்காய்களை (முகூர்த்த தேங்காயாக) வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். * இரண்டாம் வாரம்-விவாஹ ரட்சா பூஜை: காத்யாயனி தேவியின் சன்னிதியில் ஆலய பிருந்தாவனத் திருவறையில் உள்ள (புன்னை விருட்சம்) திருமண மரத்திற்கு பூஜை செய்து எடுத்து வரப்படும் மஞ்சள் கயிற்றை அம்மனுக்கு அர்ச்சனை செய்து, பிறகு மங்கள ரட்சையாகக் கட்டிக்கொள்ள வேண்டும். * மூன்றாம் வாரம்- ஜென்ம பத்ரிகா பூஜை: அம்மன் பாதத்தில் உள்ள மகாமேருவில் பெண் ஜாதகத்தை வைத்து அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும். இவ்வாறு மூன்று வாரங்களிலும் மங்கள மாரிதேவி, மந்தைவெளி அம்மன் வீற்றுள்ள அஷ்டலட்சுமி கோபுரத்தையும் சேர்த்து வலம் வந்து, காத்யாயனி தேவி முன் அமர்ந்து சக்தி வாய்ந்த திருமண ஸ்லோகத்தை 16 முறை படிக்க வேண்டும். 'ஒம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் காத்யாயனி மகா மாயே, மகா யோகின்யதீஸ்வரி, நந்த கோப சுதம் தேவம் அதி சீக்ரம் பதிம்மே குருதே நமக' (ஆண்கள், 'பதிம்மே' என்பதற்கு பதில் 'பத்னிம்மே' என்று கூற வேண்டும்). அக்னி பூஜை களத்திர தோஷம், தார தோஷத்தால் 30 வயதைக் கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு நல்ல நாளில் 'காமேஸ்வரி துளசி யக்ஞம்' என்ற திருமண அக்னி வேள்வி நடத்தப்படுகிறது. கருவறையில், திருமணத்திற்கான குரு பலனைக் கூறும் 27 நட்சத்திர சுவடிகள் பழைய மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கிறது. அதை பக்தர்கள் தரிசிக்கும் வகையில், செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அர்ச்சனை செய்தபின், அம்மன் சன்னிதி முன் 32 நிமிடங்கள் அமர்ந்து வழிபடும் 'முகூர்த்த மண்டபம் அமர்தல்' என்ற ஐதீகம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் மாலை 6 மணிக்கு புத்திர பாக்கியம் அருளும் 'பாலகாத்யாயனி யக்ஞம்' நடத்தப்பட்டு, இலவசமாக மூலிகை மருந்து பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே நேர்க்கோட்டில் காணப்படும் திருவேற்காடு கருமாரி அம்மன், மாங்காடு காமாட்சி அம்மன் மற்றும் குன்றத்தூர் காத்யாயனி அம்மனை ஒரே நாளில் தரிசித்து, தீபம் ஏற்றி வணங்கும் 'முச்சக்தி வேட்டல்' எனும் சக்தி தரிசனத்தை பல பெண்கள் செய்து வருகிறார்கள். அமைவிடம் குன்றத்தூர் முருகன் கோவில் மலை அடிவாரத்தில் இருந்து பிரியும் திருநீர்மலை சாலையில் 100 மீட்டர் நடைதூரத்தில் இக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தாம்பரம் - பூந்தமல்லி பேருந்திலும், கிளாம்பாக்கம் - ஆவடி பேருந்திலும் செல்லலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/devotional/goddess-katyayani-amman-grants-marriage-boon




