தூத்துக்குடி, தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில், கடற்கரையோரத்தில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக விசேஷ நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில், திருச்செந்தூரில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்படுவதாக ஒரு தகவல் வெளியானது. கோவிலில் தரிசன நேரம் குறைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், இன்று இது குறித்து திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அதிகாலை 4.30 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவது வழக்கம். இதில் 100 ரூபாய் தரிசனம் மற்றும் இலவச பொது தரிசனம் ஆகிய வழிகளில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். இதனிடையே, இரவு 9 மணி வரை பக்தர்கள் தொடர்ச்சியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதால், கோவில் நடையை சாத்துவதற்கு தாமதம் ஏற்பட்டு இரவு 12 மணி வரை ஆகிவிடுகிறது என்பதால், கோவில் நிர்வாகம் தரப்பில் தரிசன நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, 100 ரூபாய் கட்டண தரிசனம் அதிகாலை நடை திறப்பு முதல் மாலை 6.30 மணி வரையிலும், இலவச பொது தரிசனம் அதிகாலை நடை திறப்பு முதல் மாலை 7 மணி வரையிலும் அனுமதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கூட்ட நெரிசல் நாட்களில் வரிசையை முறைப்படுத்த மட்டுமே நேரக் கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற நாட்களில் கோவிலில் தரிசன நேரம் குறைக்கப்படவில்லை என்றும் கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/darshan-time-at-tiruchendur-has-not-been-reduced-temple-administration-clarifies




