சென்னை, கடந்த 2011 முதல் 2016ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், சென்னை பெருங்களத்தூர் ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் அடுக்குமாடி கட்டிடத்திற்கு திட்ட அனுமதி அளிக்க 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக “அறப்போர் இயக்கம்” சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை, வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், கடந்த ஜனவரி மாதம் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, வைத்திலிங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி, வழக்கை முடித்து வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் முந்தைய ஆட்சியில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான வழக்கை முடித்து வைத்த அறிக்கையை திரும்பப் பெறவும், வழக்கில் மேல் விசாரணை நடத்த அனுமதி கோரியும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன், “முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான வழக்கில் மேல் விசாரணை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார். மேலும், விசாரணையை விரைந்து முடித்து மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையை, விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/court-grants-permission-to-conduct-further-investigation-in-vaithilingam-corruption-case




