திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா, அத்திக்கடை பகுதியில் பாஸ்கர் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக மேலாக பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். இவர் கடையில் சட்ட விரோதமாக குட்கா,பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவாரூர் காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,கடந்த 25 ஆம் தேதி மாவட்ட போதைப் பொருள் தடுப்பு, தனிப்பிரிவு அதிகாரிகள் பாஸ்கரின் பெட்டி கடையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அவரது கடையில் குட்கா, பான் மசாலா, கூலிப் போன்ற போதை பொருட்கள் இருந்ததும் அதை அவர் சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்ததும், தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் போதைப் பொருளை விற்பனை செய்த பாஸ்கரை கைது செய்து விசாரித்ததில், அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தனது கடையில் போதை பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கைது மேலும், போதைப்பொருள் விற்பனையை கண்டும் காணாமல் இருப்பதற்காகவும், காவல்துறை தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்காகவும், அந்தப் பகுதியில் பணியாற்றும் நன்னிலம் தலைமை காவலர் பாரதிராஜா, குடவாசல் தலைமை காவலர் மனோகரன் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஆகிய மூவருக்கு தலா, ஐந்தாயிரம் ரூபாய் என்ற அடிப்படையில், மாதம் மாதம் இரண்டு ஆண்டுகளுக்கு, மேலாக லட்சக்கணக்கான பணம் Gpay மூலமாக லஞ்சமாக அளிக்கப்பட்டிருப்பது காவல்துறையின் விசாரணையில் அம்பலமானது. இதனைத் தொடர்ந்து நன்னிலம் துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமரன் விசாரணை அறிக்கையை, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் அவர்களுக்கு அளித்ததன் அடிப்படையில் லஞ்சம் பெற்ற இரண்டு காவலர்களையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும், இரண்டு வருடங்களுக்கு மேலாக இரு காவல் அதிகாரிகளுக்கும் போதைப் பொருள் விற்ற பாஸ்கர் மூலமாக பண பரிவர்த்தனை நடந்திருப்பதால் காவல்துறை சைபர் கிரைம், உதவியுடன் Gpay நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு, எவ்வளவு தொகை லஞ்சமாக பெறப்பட்டது, என்கிற விவரம் கேட்கப்பட்டுள்ளது. இந்த போதை பொருள் விற்பனை விவகாரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவருக்கு பண பரிமாற்றம் நடந்திருப்பதால், அவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கச் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே, லஞ்சம் பெற்றுக்கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக குடவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதை பொருட்களை புழக்கத்தில் விட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/thiruvarur-2-cops-suspended-for-taking-rs-5000month-bribe-to-let-gutka-sales-continue




