டெல்லி, இந்தியாவில் இலக்கியத்துக்கு உயர்ந்தபட்சமாக வழங்கப்படும் ஞான பீட விருது இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் மொழி பெற்றிருக்கும் 3-வது ஞானபீட விருது இதுவாகும். இதையொட்டி, டெல்லியில் நடந்த விழாவில் முன்னாள் மத்திய மந்திரி கரண் சிங், கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருதை வழங்கினார். ஞானபீட அமைப்பைச் சேர்ந்த சாகு அகிலேஷ் ஜெயின், ஸ்ரீமுதத் ஜெயின், பிரதீபா ராய், ஆர்.என்.திவாரி உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்றனர். "இந்த விருது ஓய்வுக்கானது அல்ல" ஞானபீட விருதை பெற்றுக்கொண்டு கவிஞர் வைரமுத்து ஏற்புரையாற்றினார். அவர் பேசியதாவது:- " என் அரைநூற்றாண்டு எழுத்துகளை பாராட்டி ஞானபீடம் 60 கிராம் அமிர்தப் புட்டி வழங்கியிருக்கிறது. இந்த விருது என்னை ஒரு சாய்வு நாற்காலியில் சாய்த்துவிடாது. இது ஓடி வந்த குதிரைக்கு நீட்டப்படும் புல் அல்ல. குதிரை மீது விழுந்த மற்றுமொரு சாட்டையடி. குதிரை இன்னும் வேகமெடுக்கும். நான் வெறி கொண்டு ஓடுவேன். இந்த விருதுக்கு என் தமிழ் இன்னும் நியாயம் செய்யும். நோபல் பரிசு குறித்து கேள்வி எனக்கு சில கேள்விகள் உண்டு. இலக்கியத்துக்காக இந்தியா ஒரே ஒரு நோபல் பரிசு பெற்று 113 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதன்பிறகு நோபல் பரிசு பெற தகுதியான ஒரு படைப்பாளியை இந்தியா தயாரிக்க வில்லையா? அல்லது நோபல் குழு கண்டுபிடிக்கவில்லையா? ஏகப்பட்ட உலக அழகிகளை தயாரித்த இந்தியா உலகக் கவிகளைத் தயாரிக்க மறந்ததா? இலக்கியத்துக்கு தனி பல்கலைக்கழகம் வேண்டும் ஒவ்வொரு தொழில்நுட்பத்துக்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகம் காணும் நாம், இலக்கியத்துக்கு என்று தனியே ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவக் கூடாதா? அது எப்போது? இந்த கேள்விகளோடு என் ஏற்புரையை நிறைவு செய்கிறேன். இந்த விருதுக்கு என்னை தகுதிப்படுத்திய ஒவ்வொரு சமூக மனிதனுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்." இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/a-separate-university-for-literature-is-needed-vairamuthu-asserts-at-the-jnanpith-award-ceremony




