சென்னை, பணியிடை நீக்கத்தில் அரசு ஊழியரை நீண்ட காலம் வைத்திருக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. லஞ்ச புகார் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த ராமச்சந்திரன் என்பவர், பட்டா வழங்க லஞ்சம் பெற்றதாகக்கூறி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராமச்சந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த பணியிடை நீக்கத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்தார். அதில், "தன்னை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. பணியிடை நீக்கம் அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அசன் முகமது ஜின்னா, "மனுதாரர் மீதான லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை முடிந்து 7 மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால், இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. துறை ரீதியிலான விசாரணை தொடர்பாக அவருக்கு எந்தவொரு குற்றக்குறிப்பாணையும் வழங்கப்படவில்லை. கடந்த 8 மாதங்களாக மனுதாரர் மீதான பணியிடை நீக்கம் உத்தரவு தொடர்ந்து வருகிறது. ஒருவரை இவ்வாறு தொடர்ந்து சட்டப்பூர்வமாக இடைநீக்கத்தில் வைத்திருக்க முடியாது" என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வக்கீல், "மனுதாரருக்கு எதிரான லஞ்ச முறைகேடு தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளதால், பணியிடை நீக்கத்தில் வைக்கப்பட்டுள்ளார்" என்று வாதிட்டார். நீண்ட காலம் முடியாது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை, துறை ரீதியான விசாரணை இரண்டையும் ஒன்றாக பொருத்திப் பார்க்க முடியாது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளின்படி நீண்டகாலமாக ஒருவரை இடைநீக்கத்தில் வைத்திருக்க முடியாது. அதே போல பணியிடை நீக்கத்தை மாதக்கணக்கில் தொடருவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே மனுதாரரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து அவரை முக்கியத்துவம் இல்லாத பணியிடத்தில் மீண்டும் அரசு பணியமர்த்த வேண்டும்" என்று உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/government-employees-cannot-be-kept-on-suspension-for-a-long-time-high-court-order




