சென்னை, தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- வேதனையளிக்கிறது வாக்குறுதிகள் அனைத்தும் வெற்று அறிவிப்புகளா? நடுரோட்டில் விவசாயிகளை விட்டது யார்? தூத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள், டிராக்டர்களை கொண்டு சாலையை மறித்தும், காய்ந்து கருகிய வாழை மரங்களை சாலையில் வீசியும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. நிர்வாகத்தின் அலட்சியம் அணைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது கடைமடை விவசாய நிலங்களுக்கு உரிய காலத்தில் பாசன நீர் சென்று சேராதது முழுக்க முழுக்க நிர்வாகத்தின் அலட்சியமும் பொறுப்பின்மையுமே ஆகும். வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததும், நீர் பங்கீட்டு அட்டவணை முறையாக பின்பற்றப்படாததுமே பல நூறு ஏக்கர் பரப்பளவிலான வாழை பயிர்கள் கண்முன்னே கருகி கருகி போனதற்கு காரணமாக அமைந்துள்ளது. துயர நிலை கடன் வாங்கி, வியர்வை சிந்தி வளர்த்த பயிர்கள் கருகி போனதால், விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்கள் வேடிக்கை பார்த்ததன் விளைவாகவே உழவர்கள் இன்று நடுரோட்டில் இறங்கி போராடும் துயர நிலைக்கு ஆளாகியுள்ளனர். 2 லட்சம் ரூபாய் இழப்பீடு எனவே, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் வெறுமனே வெற்று வாக்குறுதிகளோடு கடந்து போகாமல், ஒவ்வொரு விவசாய நிலத்தையும் வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறையினர் உடனடியாக கள ஆய்வு செய்து, கருகிய வாழை பயிர்களுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டு தொகையை எவ்வித இழுத்தடிப்பும் இன்றி உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். விவசாய கடன்கள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வாங்கியுள்ள விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும். பாசன நீர் முறைப்படுத்தப்படாததற்கும், கடைமடை வரை தண்ணீர் திறந்து விடப்படாததற்கும் காரணமான பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் மீது உரிய துறைசார் விசாரணை நடத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உரிய நடவடிக்கை உழவர்களின் நியாயமான கண்ணீருக்கும் கொந்தளிப்பிற்கும் மதிப்பளித்து, பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/wartime-measures-to-protect-farmers-livelihoods-in-tamil-nadu-velmurugan




