சென்னை, கல்வி நிறுவனங்களின் அதிபரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஐசரி கணேசுக்கு சொந்தமான திருவள்ளூரில் உள்ள வேல்ஸ் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வாங்க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு லஞ்சம் கொடுத்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2023-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில், மத்திய அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில், ஐசரி கணேஷ் மனு தாக்கல் செய்தார். அதில், "இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அரசு டாக்டர் பாலாஜி நாத் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவுக்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்,இந்த வழக்கு தொடர்பாக எந்த ஆதாரங்களும் இல்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்து விஜிலென்ஸ் ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளதாக கூறியுள்ளனர். முடித்து வைக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய முடியாது” என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர், "லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிக்கையை ஏற்று விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகே இந்த மனுவை விசாரிப்பது குறித்து முடிவு செய்யப்படும்" என்று கருத்து தெரிவித்தனர். இதையடுத்து தன் வழக்கை திரும்ப பெறுவதாக ஐசரி கணேஷ் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை திரும்ப பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/sudden-twist-in-the-isari-ganesh-case-high-court-grants-permission-to-withdraw-the-petition




