சென்னை சென்னையில் சொத்து தகராறில் பல் டாக்டர் மற்றும் தாய் என இருவரையும், 2 சகோதரர்கள் திட்டமிட்டு கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சென்னை அண்ணாநகர் கிழக்கு, முதல் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் அஷ்ரப் நிஷா (வயது 68). கடந்த சில ஆண்டுகளாக முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இவருக்கு 3 மகன்கள். மூத்த மகன் அப்ரார் அகமது (வயது 50). இவருக்கு திருமணமாகி பாத்திமா என்ற மனைவி உள்ளார். 2-வது மகன் அஸ்ரார் அகமது (வயது 48). திருமணம் ஆகி கருத்துவேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். 3-வது மகன் அஷ்ரப் அகமது (வயது 42). பல் டாக்டரான இவர், அதே பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு அப்ரார் அகமது, தனது மனைவியுடன் வெளியே சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் அஸ்ரார் அகமதுவும் வெளியே சென்று விட்டார். வீட்டில் இவர்களது தாய் மற்றும் தம்பி மட்டும் தனியாக இருந்தனர். சொத்து தகராறு நேற்று அதிகாலையில் வெளியே சென்றிருந்த சகோதரர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் உள்ளே தாய் அஷ்ரப் நிஷா மற்றும் தம்பி அஷ்ரப் அகமது இருவரும் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அண்ணா நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தாய்-மகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். மர்மநபர்கள் யாராவது நகை, பணத்துக்காக வீடு புகுந்து இருவரையும் கொலை செய்து இருக்கலாம் என போலீசாரிடம் சகோதரர்கள் இருவரும் கூறினர். ஆனால் போலீசாரின் விசாரணையில் வெளி நபர்கள் யாரும் வீட்டுக்குள் வந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் இல்லை. எனவே சகோதரர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் சொத்து தகராறில் தாய் மற்றும் தம்பியை சகோதரர்களே குடும்பத்துடன் சேர்ந்து அடித்துக்கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. ரூ.1 கோடி சொத்து இதுபற்றி போலீசார் கூறும்போது, அஷ்ரப் நிஷா தனது மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். அந்த வீட்டின் மதிப்பு சுமார் ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் என தெரிகிறது. அந்த வீட்டை விற்றுவிட்டு வேறு இடத்துக்கு செல்லலாம் என முதல் 2 மகன்களும் அடிக்கடி தங்களது தாயாரிடம் கூறி வந்தனர். அதற்கு அஷ்ரப் நிஷா மறுத்து வந்தார். சமீபத்தில் கட்டுமான நிறுவனர் ஒருவரை அணுகியபோது, அவர் அந்த இடத்தை வாங்கிக்கொள்வதாகவும், அந்த இடத்தில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டி அதில் 2 வீடுகளை உரிமையாளருக்கு கொடுத்துவிட்டு கூடுதலாக பணமும் தருவதாகவும், மீதம் உள்ள வீட்டை கட்டி விற்பனை செய்து கொள்வதாகவும் கூறி உள்ளார். தாய் மறுப்பு இதுகுறித்து அப்ரார் அகமது, அஸ்ரார் அகமது இருவரும் தங்கள் தாய் அஷ்ரப் நிஷாவிடம் தெரிவித்தனர். ஆனால் அதற்கு அவர்களது தாய், இடத்தை விற்றால் வீடுகள் மட்டுமே கிடைக்கும். அதில் 2 மகன்கள் அந்த வீட்டுக்கு சென்றாலும் 3-வது மகனுக்கு சொத்தில் பங்கு அல்லது இடம் கிடைக்காது. மேலும் தனது கணவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த வீட்டை விற்கக்கூடாது என மறுத்துவிட்டார். அவர்களது தம்பியான பல் டாக்டர் அஷ்ரப் அகமதுவும் தாய்க்கு ஆதரவாக சகோதரர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த சொத்து தொடர்பாக தாய் மற்றும் மகன்கள் இடையே கடந்த சில மாதங்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மருமகள் உடந்தை இந்த நிலையில், நேற்று முன்தினம் சொத்தை விற்பதற்கு அனுமதி கேட்டு மகன்கள் இருவரும் தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதால் தாய் என்றும் பாராமல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அஷ்ரப் நிஷாவை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரது கை. கால்களை பிடித்துக்கொண்டு தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்தனர். இதற்கு மூத்த மகன் அப்ரார் அகமதுமின் மனைவி உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் பல் டாக்டரான தம்பி அஷ்ரப் அகமதுவையும் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். அதன்பிறகு யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க தாய்-தம்பியின் உடல்களை வீட்டில் போட்டுவிட்டு சகோதரர்கள் இருவரும் வெளியே சென்றுவிட்டு மறுநான் அதிகாலையில் வந்து, நகை, பணத்துக்காக தங்களது தாய் மற்றும் தம்பியை மர்மநபர்கள் கொலை செய்து விட்டதாக போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் கூறி நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. 5 பேர் கைது இதுபற்றி கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்ரார் அகமது, அவரது மனைவி பாத்திமா மற்றும் 2-வது மகன் அஸ்ரார் அகமது உள்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/terror-in-chennai-dentist-and-mother-killed-over-property-dispute




