சென்னை, மின் கொள்முதலில் ரூ.5,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருப்பதாக எழுந்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். முறைகேடு கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 'அலுமினிய கண்டக்டர்கள்' வாங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் லஞ்சஒழிப்பு போலீசாரால், ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 495 கிலோமீட்டர் 'அலுமினிய கண்டக்டர்கள்' கொள்முதலில் அரசு நிர்ணயித்த விலையைவிட அதிக விலைக்கு வாங்கியது தெரியவந்தது. அதன் அடிப்படையில்தான் இந்த வழக்கு போடப்பட்டு உள்ளது. 60 இடங்களில் சோதனை இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் காலையில், தமிழ்நாடு முழுவதும் லஞ்சஒழிப்பு போலீசார் 60 இடங்களில் அதிரடி சோதனையில் இறங்கினர். 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனை வேட்டையில் ஈடுபட்டனர். மாலை வரை இந்த சோதனை நீடித்தது. இந்த சோதனை வேட்டையில் பெரும்பாலும் மின்சார வாரிய அதிகாரிகளும், ஒப்பந்த நிறுவனங்களும்தான் சிக்கியது. சென்னையில் 5 இடங்களில் இந்த சோதனை நடந்தது. சென்னை தேனாம்பேட்டை வெங்கடரத்தினம் தெருவில், காசிராஜன் என்பவர் வீட்டில் லஞ்சஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அவர் தமிழக மின்சார வாரியத்தில் தலைமை நிதி 'கண்ட்ரோலராக' வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. அவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமாக செயல்பட்டதாக தெரிகிறது. இதேபோல, சென்னை பெருங்குடியில் உள்ள சிப்காட் வளாகத்தில் செயல்படும் புவனா எண்டர்பிரைசஸ் உள்பட 4 காண்டிராக்ட் நிறுவனங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதுதவிர செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. முக்கிய ஆவணங்கள் இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், '60 இடங்களில் நடந்த சோதனையில் வழக்கு தொடர்பான முக்கியமான ஆவணங்களும், டிஜிட்டல் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பெயரளவுக்கு செயல்பட்டு வந்த சில காண்டிராக்ட் நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், தி.மு.க., ஆட்சியின்போது, மின்சாரம் கொள்முதலிலும், 5,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, மின்சாரம் கொள்முதல் தொடர்பான ஆவணங்களை, மின் வாரியத்திடம் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பெற்று, முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், 'மின்சார தட்டுப்பாடு ஏற்படும் சூழல் இருப்பதாக ஆவணங்கள் தயார் செய்து, அதிக விலை கொடுத்து மின் கொள்முதல் நடந்திருப்பதாக தெரிகிறது. ஊழல் நடந்தது உறுதியானால், வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-5000-crore-corruption-in-electricity-procurement-anti-corruption-police-begin-investigation




