சென்னை, துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் சென்னை சென்டிரலில் இருந்து கடந்த 5-ந்தேதி ஆக்ரா சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் யாரும் உரிமை கோராத நிலையில் கிடந்த டிராலி சூட்கேசை ஆக்ரா ரெயில்வே போலீசார் திறந்து பார்த்தபோது அதில் தலையில்லாத மனித எலும்புக்கூடு மற்றும் உடல் உறுப்புகள் இருந்தது. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் அந்த சூட்கேஸ் சென்னை சென்டிரலில் இருந்து ரெயிலில் வைக்கப்பட்டது தெரியவந்தது. சூட்கேசை வைத்த இருவரும் அங்கிருந்து புறப்பட்டு எங்கு இறங்கினர் என்பதை கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர். இதில் அவர்கள் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் இறங்கியது தெரியவந்தது. அவர்கள் எங்கு தங்கியுள்ளனர் என்று விசாரணை நடத்தி செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது பெரிய அண்டாவில் மைதாமாவுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட மனித சதைப்பகுதிகள் இருப்பது தெரியவந்தது. இந்த மனித சதைப்பகுதிகள் ரெயிலில் சிக்கிய எலும்புகள் மற்றும் உடல் உறுப்புகள், கூடுவாஞ்சேரி வீட்டில் மீட்கப்பட்ட சதைப்பகுதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். வடமாநில தம்பதி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹயாத் நிஷா (38) என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. மீட்கப்பட்ட உடல் பாகங்கள் அவருடையதுதானா என்பது குறித்து உறுதி செய்ய தடயவியல் பரிசோதனை நடைபெற்று வருகிறது. உடல் பாகங்களின் மாதிரிகள் உள்ளிட்டவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை முடிவுகள் கிடைத்த பிறகே உயிரிழந்த பெண்ணின் அடையாளம் குறித்து முழுமையாக உறுதி செய்ய முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஹயாத் நிஷாவுடன் சுமார் 2 மாதங்களாக ஒரே வீட்டில் தங்கி இருந்த வடமாநிலத்தை சேர்ந்த தம்பதி தற்போது தலைமறைவாகி இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையை கண்டுபிடிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. அனைத்து கோணங்களிலும் விசாரணை கண்காணிப்பு கேமராவில் சிக்கிய காட்சிகளை அடிப்படையாக கொண்டு கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் கடந்த 2 மாதங்களாக தங்கி இருந்த வடமாநிலத்தை சேர்ந்த தம்பதியை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கொலை நகைக்காக நடைபெற்றதா? அல்லது தகாத உறவு காரணமாக நடைபெற்றதா? என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. சந்தேகத்துக்குரிய வடமாநில தம்பதியை பிடிப்பதற்காக தனிப்படை போலீசாரை அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களை பிடித்த பிறகுதான், உடன் தங்கி இருந்த பெண்ணை கொலை செய்து தலையை துண்டித்து, உடலை துண்டு துண்டாக வெட்டி எலும்புகளை தனியாக பிரித்து சூட்கேசில் வைத்து ரெயில் மூலம் ஆக்ராவுக்கு அனுப்பியது ஏன் என்பது குறித்து முழுமையான விவரங்கள் தெரியவரும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/police-launch-manhunt-for-north-indian-couple-who-killed-a-woman-and-chopped-her-body-into-pieces




