மும்பை, மராட்டிய மாநில காவல்துறையில் கடந்த 2019-20 காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட, 'சேவார்த்' சம்பள மென்பொருளில் பதிவான தகவல்களை, புதிய தளத்துக்கு மாற்றும் பணிகள் சமீபத்தில் நடைபெற்றன. அப்போது, காவல்துறையில் இல்லாத ஊழியர்களின் பெயர்களுக்கு சம்பளமாக 6.5 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இந்த குறித்து, வடக்கு மண்டல போலீஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. அதில், காவல்துறையுடன் தொடர்பில்லாத 10 பேரின் பெயர்கள், ஊழியர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு, 2019 டிசம்பர் முதல், 2020 பிப்ரவரி வரையிலும், பின்னர் 2020 ஜூன் முதல் 2020 செப்டம்பர் வரையிலும் மாதந்தோறும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. அதோடு, போலியாக வருகைப் பதிவேடுகள் தயாரிக்கப்பட்டு மோசடிகள் நடந்திருப்பதும் அம்பலமானது. இதன் மூலம், ரூ.6.5 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மும்பை போலீஸ் துறையில் அப்போதைய நிர்வாக அதிகாரிகளாக பணியாற்றிய ராம்கிஷன் கோஸ்வாமி, நாகேஷ் தல்வாடேகர், விஜயா சவான், தலைமை எழுத்தர் அஜெய் ரத்தோட் மற்றும் மூத்த எழுத்தர் அமோல் மேஷ்ராம் ஆகியோர் மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், குற்றச்சதி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விஜய் சவான், அமோல் மேஷ்ராம் இருவரும் சேர்ந்து போலீசாருக்கான போலி சேவை எண், ஓய்வூதிய திட்ட எண்களை உருவாக்கி, 10 போலி ஊழியர்களின் பெயர்களை சேர்த்து, இந்த மோசடிக்கு உதவியுள்ளனர். இதனால், அவர்கள் இருவரும் பணியில் இருந்து சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளனர். போலி ஊழியர்களின் பெயர்களில் திறக்கப்பட்ட வங்கி கணக்குகளை இயக்கியது யார்? அதன் மூலம் யார், யாருக்கெல்லாம் பணம் சென்றது என்ற விவரங்கள் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/salaries-paid-to-non-existent-employees-rs-65-crore-fraud-in-maharashtra-police




